மும்பை தாக்குதலின் போது யூதர்களை குறிபார்த்து சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிட்டேன்: அபு ஜிண்டால்
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி முதல் 29-ந் தேதி 10 தீவிரவாதிகள் அடங்கிய குழு தாக்குதல் நடத்தியது. சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ், ஓப்ராய் ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்கள் கொடுந்தாக்குதல்களுக்குள்ளாகின. மொத்தம் 166 அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
இதில் டிரைடண்ட் ஓப்ராய் ஹோட்டலில் யூதர்கள் தங்கியிருந்த சபாத் ஹெளஸும் அடக்கம். தீவிரவாதிகள் சபாத் ஹெளஸில் இருந்த இஸ்ரேலியர்கள் பலரையும் சுட்டுக் கொன்றனர். மும்பை தாக்குதலில் அதிகம் கொல்லப்பட்ட வெளிநாட்டவரில் இஸ்ரேலியர்கள்தான்.
தற்போது பிடிபட்டுள்ள அபு ஜிண்டால்தான் சபாத் ஹெளஸில் இருந்த யூதர்களை குறிவைத்து சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிட்டிருக்கிறான். இது தொடர்பாக டெல்லி போலீஸ் கஸ்டடியில் உள்ள அவன், 2008-ம் ஆண்டு நவம்பர் 27-ந் தேதி தீவிரவாதி அபு அல் காசா தான் ஓப்ராய் ஹோட்டலில் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தான். அப்போது யூதர்கள் அதிகம் கூடும் சபாத் ஹெளஸில் உள்ள யூதர்களை குறிவைத்து சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிட்டேன். அங்குதான் யூதர்கள் அதிகம் கூடுவர் என்பது எனக்கு முன்பே தெரியும். அதனால் இஸ்லாத்தின் எதிரியான அவர்களை சுட்டுக் கொல்லுமாறு கட்டளை பிறப்பித்தேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறான்.
இதற்கு முன்னர் பாகிஸ்தானின் கராச்சி நகர் அருகே கட்டுப்பாட்டு அறை அமைத்து மும்பை தாக்குதலை அங்கிருந்து இயக்கியது, தாக்குதல் நடந்த போது கட்டுப்பாட்டு அறையில் இருந்த தீவிரவாத தலைவர்கள் மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்பு தொடர்புகள் பற்றி கூறியிருந்தான் ஜிண்டால். இந்நிலையில் யூதர்களை குறிவைத்து சுட்டுக் கொல்ல உத்தரவிட்டிருந்ததையும் ஜிண்டால் ஒப்புக் கொண்டிருக்கிறான்.