குடும்ப உறவையே பிரித்து விட்டாரே நித்தியானந்தா... பெற்றோர் கண்ணீர் விட்டுக் கதறல்!

கிருஷ்ணமூர்த்தி, ஜெயந்தி தம்பதியினரின் மகன் சந்தோஷ். சாப்ட்வேர் என்ஜீனியராக நல்ல பணியில் இருந்தவர். இப்போது அந்த வேலையை விட்டு விட்டு நித்தியானந்தாவிடம் போய்ச் சேர்ந்து விட்டார். தங்களது மகன் போன போக்கைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பலமுறை சந்தோஷைக் கூப்பிட்டும் அவர் வரவில்லை.
மேலும் அவ்வப்போது நித்தியானந்தா தலைமறைவாவதும், அவர் மீது வழக்குகள் போடப்படுவதும், பிடதி ஆசிரமத்தில் பிரச்சினைகள் தலை தூக்குவதுமாக இருந்ததால் பெற்ற மனது துடித்தது. மகனை பலமுறை வருந்தி அழைத்தும் அவர் வர முடியாது என்று கூறி விட்டாராம். அதேசமயம் ஒரு முறை, தான் வர முடியாத சூழ்நிலையில் இருப்பதாக சந்தோஷ் கூறியுள்ளார்.
இதையடுத்து தங்கள் மகன், ஆசிரமத்தில் ஆபத்தில் இருப்பதாகவும், அவனை மீட்டு தருமாறும் பிடதி போலீசில் புகார் செய்தனர். ஆனால், போலீஸ் நிலையம் வந்த சந்தோஷ், ஆசிரமத்தை விட்டு நான் வர முடியாது எனக் கூறி விட்டார். இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து, என் மகனை, நித்தியானந்தா, சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளார். மகனை மீட்டு தாருங்கள் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சந்தோஷ் கோர்ட்டில் ஆஜராகியிருந்தார். அவரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். விசாரணையின்போது, நித்தியானந்தா ஆசிரமத்தில் உங்களை அடைத்து வைத்துள்ளனரா, உங்கள் பெற்றோருடன் செல்ல விரும்புகிறீர்களா என நீதிபதி கேட்டபோது, நான் ஆசிரமத்தில் இருக்க விரும்புகிறேன். பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை. ஆசிரமத்தில் எந்தவித பிரச்னையும் இன்றி சுதந்திரமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.இதனால் வேறு வழியில்லாத நீதிபதி,உங்கள் விருப்ப்படி ஆசிரமத்திற்கு செல்லலாம் என்று உத்தரவிட்டார்.
மேலும் தனது பெற்றோரையும் சந்தோஷ் கண்டு கொள்ளவில்லை. இதைப் பார்த்த பெற்றோர் கண்ணீர் வடித்தனர். கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், அப்பா, அம்மாவுடன் செல்ல மாட்டேன் என்று கூறும் அளவுக்கு, நித்தியானந்தா, என் மகன் மனதை மாற்றி விட்டார். நித்யானந்தா தேச துரோகம் செய்து வருகிறார். குடும்ப உறவை பிரித்து வைத்துள்ளார். அவருக்கு கடவுள் தண்டனை கொடுப்பார் என்று குமுறலுடன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications