சேரன்மகாதேவி அருகே பாறைகளுக்கு வைத்த வெடியால் 25 வீடுகள் சேதம்
நெல்லை: சேரன்மகாதேவி அருகே நேற்றிரவு நதிநீர் இணைப்பு கால்வாய் வெட்டும் பணிக்காக வைக்கப்பட்ட வெடியால் அப்பகுதியில் இருந்த 25 வீடுகள் சேதம் அடைந்தன. இச்சம்பவத்தில் அப்பகுதி மக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சி காலங்களில் பாசனத்திற்காகவும், மழை காலங்களில் வீணாகும் மழை நீரை சேமி்த்து வைத்து பாசனத்தி்ற்கு திருப்பி விடும் வகையிலும் தாமிரபரணி, நம்பியாறு, கருப்பாநதி ஆகிய நதிகளை இணைத்து ரூ.635 கோடி மதிப்பீட்டில் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே வெள்ளாங்குழி முதல் தூத்துக்குடி மாவட்டம் எம்.எல்.நேரி வரை சுமார் 72 கிலோ மீட்டருக்கு வெள்ள நீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கால்வாய் வெட்டும் பணி தற்போது வேகமாக நடந்து வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில காணப்படும் பாறைகள் வெடி வைத்து அகற்றப்படுகிறது. நேற்றிரவு சேரன்மகாதேவி அருகேயுள்ள புதுக்குடி, கூனியூர் உள்ளி்ட்ட கால்வாய் பகுதிகளில் வெடி வைக்கப்பட்டது. சுமார் ஒன்றரை அடி ஆழத்தில் வெடி வைக்க வேண்டும். ஆனால் 3, 4 அடி ஆழத்தில் வெடி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கால்வாயின் அடிப்பகுதியில் காணப்பட்ட பாறைகள் வெடித்துச் சிதறி அருகில் இருந்த குடியிருப்புகளில் விழுந்தன.
இந்த சம்பவத்தால் புதுக்குடி மற்றும் கூனியூர் பகுதியில் சுமார் 25 வீடுகள் சேதமடைந்தன. கால்வாய் பகுதியில் வெடி வெடித்ததில் பாறைகள் சுமார் 1500 மீட்டர் வரை சிதறிக் கிடந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.