ராமர் பாலத்தை பாதுகாக்க தவறினால் நாடு தழுவிய அளவில் போராட்டம்: பாஜக எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் சேது சமுத்திர திட்டப்பணிகள் துவங்கின். ஆனால் ராமர் பாலம் வழியாக சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்றும், அதை மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் இந்து அமைப்புகளும், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து இதுபற்றி ஆராயுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சேது சமுத்திர திட்டப் பணிகளை நிறுத்தி வைத்த மத்திய அரசு மாற்றுப் பாதை குறித்து ஆராய நோபல் பரிசு வென்ற சுற்றுச்சூழல் வல்லுனர் ஆர்.கே.பச்செளரி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அண்மையில் அந்த குழு தனது அறிக்கையை சமர்பித்தது. அதில், சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மாற்றுப் பாதையை தேர்ந்தெடுப்பது பொருளாதார ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் சாத்தியமற்றது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து மத்திய அரசு இன்னு இறுதி முடிவெடுக்கவில்லை. இன்னும் 8 வாரத்திற்குள் ஒரு முடிவு எடுத்து அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் வி.கே. மல்ஹோத்ரா கூறுகையில்,
ராமர் பாலம் விலை மதிப்பற்ற தேசிய பாரம்பரிய சின்னமாகும். அதனால் அதை எந்த விலை கொடுத்தாவது பாதுகாக்க வேண்டும். ராமர் பாலத்தை தகர்க்காமல் சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றுவது சாத்தியம் இல்லை என்று கூறும் ஆர்.கே.பச்செளரியின் அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் நிராகரிக்க வேண்டும். மத்திய அரசு ராமர் பாலத்தை காக்க தவறினால் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்துவோம் என்றார்.