'முதல்வர் மகள்' செய்தி விவகாரம்: ஜூனியர் விகடன் மீது மூன்றாவது அவதூறு வழக்கு!
சென்னை: முதல்வர் மகள் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்ட வாரம் இருமுறை வெளியாகும் பத்திரிகை ஜூனியர் விகடன் மீது 2 கிரிமினல் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஜெயலலிதா பதவிக்கு வந்த பின் ஜூவி மீது போடப்படும் மூன்றாவது வழக்கு இது.
சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், மாநகர குற்றவியல் அரசு வக்கீல் ஜெகன் தாக்கல் செய்துள்ள செய்துள்ள 2 மனுக்களில் கூறியிருப்பதாவது:
வாரம் இருமுறை வெளியாகும் ஜுனியர் விகடன் பத்திரிகை, 11.7.2012 தேதியிட்ட இதழில், 'துப்பட்டாவுக்குள் மறையும் ஜெயில் மகள்' என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. அதில், 'முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லிக்கொள்ளும் பிரியா மகாலட்சுமியை மோசடி வழக்கில் கைது செய்திருந்த போதிலும், மீடியாக்களில் பார்வையில் இருந்து போலீசார் அவரை பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன?' என்று செய்தி வெளியாகியிருந்தது.
அதேபோல, 8.7.2012 தேதியன்று வெளியான இதழில், என் கைதுக்கு காரணம் சசிகலா' என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த 2 செய்திகளும் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி கிரிமினல் அவதூறு குற்றமாகும். பிரியா மகாலட்சுமி என்பவர் முதல்வர் மகள் இல்லை என்று நன்கு தெரிந்திருந்தும், உள்நோக்கத்துடன், உண்மை சிறிதும் இல்லாத இந்த செய்தியை வெளியிடப்பட்டுள்ளது.
சமுதாயத்தில் முதல்வருக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இந்த செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே அந்த பத்திரிகையின் ஆசிரியர் ரா.கண்ணன், வெளியீட்டாளர் கே.அசோகன், பதிப்பாளர் எஸ். மாதவன், பிரியா மகாலட்சுமி, நிருபர்கள் ராஜா திருவேங்கடம், ராமேஷ் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜுனியர் விகடன் பத்திரிகை மீது கடந்த மாதம் ஒரு அவதூறு வழக்கை முதல்வர் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.