குடியரசு துணைத் தலைவர் தேர்தல்- ஜெயலலிதா, மமதா ஆதரவைக் கோர ஜஸ்வந்த்சிங் திட்டம்
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் தமக்கு அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோரிடம் ஆதரவு கோருவேன் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ஜஸ்வந்த்சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட என்னைத் தேர்வு செய்த தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் மிகப் பெரிய பதவியான குடியரசு துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது மிகப் பெரிய சவாலாகும். இந்த வாய்ப்பை பணிவுடன் ஏற்கிறேன்.
காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான ஹமீது அன்சாரியை எதிர்த்துப் போட்டியிடுவதால் இதை "போர்' போல சித்திரிக்கக் கூடாது. அப்படி அழைப்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒற்றுமையுடன் இருப்பதால் நான் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளராகத் திகழ்கிறேன். தேர்தலில் என்னை ஆதரிக்கக் கோரி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறாத ஜெயலலிதா, மமதா பானர்ஜி ஆகியோரிடமும் ஆதரவு கேட்பேன் என்றார் அவர்.