சென்னை வந்த ஜெ.. சந்தித்த சங்மா.. விரைவில் மீண்டும் கொடநாடு பயணம்!
முதல்வர் ஜெயலலிதா கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி கொடநாட்டிற்கு சென்றார். அவர் அங்கிருந்தே அரசு அலுவல்களை கவனித்து வந்தார். இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி அவர் இன்று பிற்பகல் சென்னை வந்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் சிலவற்றின் ஆதரவோடு போட்டியிடும் பி.ஏ. சங்மா ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட வீட்டில் வைத்து இன்று மாலை 4 மணி அளவில் சந்தித்து ஆதரவு கோரினார்.
ஜெயலலிதாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த சங்மாவிடம் அவரது வெற்றி வாய்ப்பு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், வரும் 22ம் தேதி வரை காத்திருங்கள் என்று தெரிவித்தார். மேலும் ஜெயலலிதா தனக்கு ஆதரவளித்துள்ளதோடு மட்டுமல்லாமல் தன்னை ஆதரிக்குமாறு பல்வேறு கட்சிகளின் தலைவர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார். ஜெயலலிதாவின் ஆதரவே எனக்கு மிகப் பெரிய பலம். மேலும் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக அறிவித்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி மீது எனக்கு எந்த கோபமும் இல்லை என்றார்.
நாளை நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருந்து ஜெயலலிதா வாக்களிக்கிறார். அதன் பிறகு மீண்டும் கொடநாடு திரும்புகிறார். அவர் இன்னும் சில வாரங்கள் அங்கு தங்கியிருந்து அரசு அலுவல்களை செய்வார் என்று கூறப்படுகிறது.