தேமுதிக எம்.எல்.ஏ. கைது ஜெ. அரசின் பழி வாங்கும் போக்கையே காட்டுகிறது: விஜயகாந்த்

அவர் வெளிட்டுள்ள அறிக்கையில், தே.மு.தி.கவை சேர்ந்த திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் அருண் சுப்பிரமணியம் இன்று அதிகாலை காவல் துறையினரால் திடீரென கைது செய்யப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவர் ஏதோ நில அபகரிப்பு வழக்கில் ஈடுபட்டதாகவும், அதனால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் செய்தி வெளியிடப்படுகிறது.
இதில் முறைப்படி முன் அறிவிப்பு ஏதுமின்றி அவர் கைது செய்யப்பட்டிருப்பது ஏதோ உள்நோக்கத்தோடு ஆளும் கட்சி செயல்படுவதை காட்டுகிறது. நிலத்தை அபகரிக்கும் அளவிற்கு அரசாங்கத்தில் அவர் எந்த முக்கிய பொறுப்பிலும் இல்லை. ஏற்கனவே அத்தகைய பொறுப்பு வகித்தவரும் அல்ல. ஆகவே அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, மிரட்டி நிலம் பறித்தார் என்று சொல்வது அபத்தமானது.
உண்மையில் சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை அருண் சுப்பிரமணியம் தொகுதி மக்களுக்கு பணியாற்றி நல்ல பெயர் எடுத்து வருகிறார். அண்மையில் நான் திருத்தணிக்கு சென்றபோதும் அதை நேரில் கண்டறிந்தேன். ஆளும் கட்சியினரால் இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் வேண்டும் என்றே அவர் மீது பொய் வழக்கை போட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கின்றேன்.
இன்றைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் தங்களுக்கு பிடிக்காதவர்களை நில அபகரிப்பு என்ற பெயரில் கிரிமினல் வழக்குகள் தொடுத்து வருகின்றனர். இப்போது தே.மு.தி.கவிற்கும் அவர்கள் குறி வைத்துள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.
நிலம் சம்பந்தப்பட்ட எந்த வழக்குகளும் சிவில் வழக்குகளாக இருக்குமே தவிர, கிரிமினல் வழக்குகளுக்கான முகாந்திரம் இருப்பதில்லை. அப்படி இருந்தும் அவர் மீது கிரிமினல் வழக்கு ஜோடிக்கப்பட்டிருக்கிறது என்றால், இது ஆளும் கட்சியின் பழி வாங்கும் போக்கையே காட்டுகிறது என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications