மாஜி திமுக எம்எல்ஏ வீட்டில் கேரள சிறுமி கற்பழித்து கொலை: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
சென்னை: வீட்டு வேலைக்காக கேரளாவில் இருந்து அழைத்து வரப்பட்ட சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகள் சத்யா(15). அவர் பெரம்பலூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் தங்கி இருந்து வீட்டு வேலைகள் செய்து வந்தார். இந்நிலையில் அவர் திடீர் என்று மர்மமான முறையில் இறந்தார். உடல்நலக் குறைவால் சிறுமி இறந்ததாக ராஜ்குமார் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தனது மகள் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக சந்திரன் புகார் கூறினார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், திமுக மாவட்ட பிரதிநிதி ஜெய்சங்கர், டாஸ்மாக் ஊழியர் அன்பரசன், டிரைவர் மகேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேருக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேரும் நேற்று திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனர். அவர்களுக்கு தனித்தனியாக பரிசோதனைகள் நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் ராஜ்குமார் உட்பட 4 பேரும் ஆண்மை உள்ளவர்கள்தான் என மருத்துவர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து 4 பேரும் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே தனது மகள் கொலை வழ்ககில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்றும், உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் சந்திரன் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பீர்மேடு சமூகநல அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இது தொடர்பான ஆணை பெரம்பலூர் போலீசாருக்கு இன்று அனுப்பி வைக்கப்படும்.












Click it and Unblock the Notifications