ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் குடைச்சல் கொடுத்த சரத்பவார் சமாதானமானார்
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இப்பொழுது சமரசமாகிவிட்டார். டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் நடந்த பேச்சுவார்த்தையில் மத்தியிலும் மஹாராஷ்டிராவிலும் கூட்டணியை வலுப்படுத்த ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டதையடுத்து தமது அதிருப்தியை சரத்பவார் விலக்கிக் கொண்டிருக்கிறார்.
நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து பிரணாப் முகர்ஜி விலகிய நிலையில் தமக்கு பிரதமருக்கு அடுத்த 2-வது இடம் கிடைக்கும் என்று சரத்பவார் எதிர்பார்த்தார். ஆனால் அது கிடைக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த அவர் அமைச்சரவைக் கூட்டங்களையும் புறக்கணித்தார்.
மத்தியிலும் மஹாராஷ்டிராவிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்பு கமிட்டியை உருவாக்க வேண்டும், கூட்டணி கட்சிகளை மரியாதையாக நடத்த வேண்டும் என்பதே தேசியவாத காங்கிரசின் கோரிக்கையாக இருந்தது. இதனை நிறைவேற்ற கெடுவும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சரத்பவார் நேரில் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின் போது கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு அமைப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் பிரபுல் படேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி இணக்கமான முறையில் செயல்படுவதற்காக, ஒருங்கிணைப்பு குழுக்களை உருவாக்குவது என்று பிரதமர் மற்றும் சோனியாவுடன் சரத்பவார் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, மாதத்துக்கு ஒரு முறையாவது, கூட்டணி கட்சிகள் கூடி, கொள்கைகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தும். மராட்டிய மாநில அரசுக்கான ஒருங்கிணைப்பு குழு விரைவில் வகுக்கப்படும் என்றார் அவர்.