ரிசர்வ் வங்கி பெயரில் மோசடி- 4 பேர் கைது- 'டுபாக்கூர்' மன்னன் அப்ரோ ஏசுதாஸ் தலைமறைவு
சென்னை கொளத்தூர் குடியிருப்பில் அப்ரோ டிரஸ்ட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று செயல்படுவதாகவும் சுய உதவிக் குழு பெண்களுக்கு வட்டியில்லாத கடன் தருவதாகவும் விளம்பரம் செய்தது.
இதை நம்பி பல சுய உதவிக் குழுக்கள் பணத்தைக் கொடுத்திருந்தனர். ஆனால் இப்படி ஒரு டுபாக்கூர் மோசடி நடப்பதை அறிந்து ரிசர்வ் வங்கி அதிர்ந்து போனது. இதனால் ரிசர்வ் வங்கி கண்டனமும் தெரிவித்தது. மேலும் ரிசர்வ் வங்கியின் பெயரில் மோசடியில் ஈடுபடும் அப்ரோ நிறுவனத்திடம் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் எச்சரித்தது.
இந்த எச்சரிக்கையை அடுத்து உஷாரான சென்னை மாநகர காவல்துறை விசாரணை நடத்தி மத்திய குற்றப் பிரிவு போலீசாரே தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து அப்ரோ நிறுவனத்தின் இயக்குநர் ஏசுதாசை போலீசார் கைது செய்ய சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார். இதைத் தொடர்ந்து ஏசுதாசின் கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது தலைமறைவாக உள்ள டுபாக்கூர் மன்னன் ஏசுதாசை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதில் ரொம்ப கொடுமை என்னவெனில் ரிசர்வ் வங்கியிடம் சிக்கி தலைமறைவான பிறகும் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 20 பெண்கள் அப்ரோ நிறுவனத்துக்கு ஆதரவாக முழக்கம் போட்டதுதான்!