ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம்: ஜே.பி.சி. தலைவர் சாக்கோவுக்கு வாய்ப்பூட்டு போட்டது திமுக?
நடந்தது என்ன?
கடந்த ஜூலை 18-ந் தேதியன்று மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் லஸ்மன் தாஸ் மற்றும் வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் ஜேபிசி முன்பு ஆஜராகி ஷாகித் பல்வா நிறுவனத்திடமிருந்து கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் கடன் பெற்றதாகக் கூறப்படும் ரூ230.31 கோடியை திருப்பி செலுத்திய விதம் குறித்து விளக்கம் அளித்தனர். நிதித்துறை செயலாளர் ஆர்.எஸ். குஜ்ராலும் அப்போது உடனிருந்தார்.
அன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த ஜேபிசி தலைவர் பி.சி. சாக்கோ, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் அறிக்கையை விளக்கிப் பேசினார். அதாவது கலைஞர் டிவி திருப்பி செலுத்தியதாகக் கூறப்படும் தொகையில் ரூ52.25 கோடியை கொல்கத்தாவைச் சேர்ந்த 19 போலி நிறுவனங்கள் நிறுவனங்கள் மூலம் அத்தொலைக்காட்சி பெற்றிருக்கிறது என்றார் சாக்கோ.
இந்த விவகாரம் ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியிருக்கும் கனிமொழிக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தக் கூடியவை. இதனால் உடனடியாக டி.ஆர்.பாலுவை அழைத்த திமுக தலைவர் கருணாநிதி சாக்கோவை அடக்கி வைக்குமாறு காங்கிரஸிடம் பேசுங்கள் என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து கொந்தளிப்புடன் ஜூலை 18-ந் தேதி இரவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமதுபடேலை நேரில் சந்தித்தார் டி.ஆர்.பாலு.
இதையடுத்து ஜேபிசியின் அடுத்த கூட்டம் கடந்த 24-ந் தேதி நடைபெற்றது. அப்போது சிபிஐ இயக்குநர் அமர்பிரதாப் நேரில் ஆஜராகி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் விசாரணை நிலவரத்தை விவரித்தார். ஆனால் அன்றைய கூட்டம் பற்றி சாக்கோ செய்தியாளர்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்குக் காரணம் திமுகவின் நெருக்கடிதான் என்று கூறப்படுகிறது. இதை வடமாநில ஊடகங்களும் சுட்டிக்காட்டி செய்திகளை வெளியிட்டிருந்தன.
இதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் செயல்பாட்டில் வெளியில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தலையிடக் கூடாது. ஜேபிசி முன்பு தெரிவிக்கப்பட்ட தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவிப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் அப்படி செய்தியாளர்களை சந்திக்கக் கூடாது என்று நெருக்கடி கொடுக்கப்பட்டிருந்தால் அது தவறு. இது குறித்து அடுத்த கூட்டத்தில் இது பற்றி சுட்டிக்காட்டுவோம் என்றார்.
ஷாகித் பல்வாவுக்கு கலைஞர் டிவி பணத்தை திருப்பிக் கொடுத்த கதை
ஷாகித் பல்வா நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டிவி பெற்றது ரூ230.31 கோடி. இதை திருப்பி செலுத்துவதற்காக கலைஞர் டிவி கடன் பெற்ற விவதம்
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திடமிருந்து... ரூ24.50 கோடி, விஜய் மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ30 கோடி, ஷா வாலஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ28 கோடி
கலைஞர் டிவி நிர்வாக இயக்குநராக ஷரத் குமார் மூலமாக அவரது மியூச்சுவல் ஃபன்ட்டில் இருந்து ரூ0.3 கோடி ப்ராங்ளின் நிறுவனத்திடம் ரூ0.5 கோடி, ஆக்சிஸ் வங்கியிலிருந்து ரூ1.35 கோடி, ஐசிஐசி யில் இருந்து ரூ4.78 கோடி, ப்ராங்க்ளின் நிறுவனத்திடம் இருந்து ரூ2 கோடி
அஞ்சுகம் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ69.61 கோடி, சபரி மீடியா அண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்திடமிருந்து ரூ83 கோடி, ஜெமினி இண்டஸ்ட்ரிஸிடமிருந்து ரூ8.25 கோடி என கடன் வாங்கி ஷாகித் பல்வா நிறுவனத்துக்கு திருப்பிக் கொடுத்திருப்பதாக கலைஞர் டிவி கணக்கு வைத்திருக்கிறது.
இதில் எங்கு ஓட்டை இருக்கிறது?
சபரி மீடியா நிறுவனத்திடமிருந்து வாங்கியதாக சொல்லப்படுவது ரூ83 கோடி. இதில்தான் 19 கொல்கத்தா நிறுவனங்கள் வழியாக சபரி மீடியா நிறுவனம் மூலமாக ரூ52.25 கோடி பெறப்பட்டிருக்கிறது. இங்கு சொல்லப்படும் 19 கொல்கத்தா நிறுவனங்கள்தான் முகவரி அற்றவை.. வருமான வரித் தாக்கல் செய்யும் பட்டியலில் இல்லாதவை என்று ஜேபிசி முன்பு வருமானவரித்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.