ரோஹித் சேகரின் தந்தை என்.டி. திவாரி தான்: மரபணு சோதனையில் வெட்ட வெளிச்சமானது!
முதுபெரும் காங்கிரஸ் தலைவரான என்.டி.திவாரியை தமது தந்தை என்று உரிமை கோரி ரோஹித் சேகர் என்பவர் கடந்த 2008ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். பல ஆண்டுகளாக இழுத்துக் கொண்டே போன இந்த வழக்கில் மரபணு பரிசோதனைக்காக ரத்த மாதிரியை என்.டி. திவாரி கொடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
அவரது மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மே 29ம் தேதிக்குள் என்.டி. திவாரி ரத்த மாதிரியை கொடுத்தாக வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து டேராடூனில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற மருத்துவர்கள் குழு ரத்த மாதிரி எடுத்தது. இது தவிர ரோஹித் சேகர் மற்றும் அவரது தாய் உஜ்வாலா சர்மா ஆகியோரிடமும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டது.
இதையடுத்து நடத்தப்பட்ட மரபணு பரிசோதனை அறிக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் சற்று முன் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ரோஹித்தின் தந்தை திவாரி தான் என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து ரோஹித்தின் 4 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. ரோஹித் வழக்கு தொடர்ந்தபோது திவாரி ஆந்திர மாநில ஆளுநராக இருந்தார். இந்த பிரச்சனையால் உடல் நலக்குறைவைக் காரணம் காட்டி 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.