ஸ்ருதி படித்த பள்ளியில் போக்குவரத்து அதிகாரிகள் ரெய்டு ஆவணங்கள் பறிமுதல்
சென்னை: மாணவி ஸ்ருதி படித்த சென்னை சேலையூர் ஜியோன் பள்ளியில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு நடத்தி பல்வேறு ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை சேலையூரில் உள்ள ஜியோன் மேல்நிலைப்பள்ளியின் மெயின் ஸ்கூலில் 2ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ருதி பரிதாபமான முறையில் பள்ளிப் பேருந்தின் ஓட்டை வழியாக கீழே விழுந்து அதே பேருந்தில் அடிபட்டு உயிரிழந்தாள்.
இந்த விபத்து பெரும் பரபரப்பையும், சோகத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பள்ளித் தாளாளர் என்.விஜயன், பேருந்தின் உரிமையாளர் யோகேஷ்வரன், டிரைவர் ஸ்ரீமான், கிளீனர் சண்முகம், ஓட்டை பேருந்துக்கு எப்சி கொடுத்த மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இப்பள்ளிக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில், இன்று அப்பள்ளிக்கு போக்குவரத்துத் துறையினர் வந்தனர். அவர்கள் அங்கு பள்ளி அலுவலகத்தில் ஆய்வு நடத்தி சில ஆவணங்களைப் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.
மாணவி ஸ்ருதி பயணித்த பேருந்து இப்பள்ளிக்கூடத்திற்குச் சொந்தமானதா, அப்பள்ளிக்கு கொடுக்கப்பட்டு வந்த வாடகை, ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது.