தமிழர்களிடம் மன்னிப்பு கேட்ட பிறகு கருணாநிதி டெசோ மாநாட்டை நடத்தலாம்-நெடுமாறன்
ஈரோடு: இலங்கை இனப் படுகொலை சம்பவத்திற்கு உலக தமிழர்களிடம், திமுக தலைவர் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும். அதன்பிறகு அவர் டெசோ மாநாட்டை நடத்தலாம் என்று தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூலை தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் கவிஞர் காசியானந்தன், தமிழர் உரிமை முன்னணி ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி, மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், தமிழர் தேசிய இயக்க பொதுச் செயலாளர் கா.பரந்தாமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பழ.நெடுமாறன், உலக தமிழர்களிடம் திமுக தலைவர் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இது குறித்து கூறியதாவது,
இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்கு இலங்கை அரசும், மத்திய அரசும், மத்திய அரசுக்கு உறுதுணையாக செயல்பட்ட திமுகவும் பொறுப்பேற்க வேண்டும். இதை மறைப்பதற்காக டெசோ மாநாட்டை திமுக தலைவர் கருணாநிதி நடத்துகிறார்.
முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். நெருக்கடியான அந்த சூழ்நிலையில் ஈழத் தமிழர்களுக்கு உதவாத கருணாநிதி இப்போது டெசோ மாநாடு நடத்துவது ஏன்?
இதற்காக உலக தமிழர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுவிட்டு டெசோ மாநாட்டை கருணாநிதி நடத்த வேண்டும். இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து தமிழர் தலைவர்கள் வருவதாக கருணாநிதி தகவல் வெளியிட்டு வருகிறார்.
முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் போது கருணாநிதி நாடகம் நடத்திய போது இவர்கள் எங்கே இருந்தார்கள் என்று தெரியவில்லை. விரைவில் தமிழீழ நாடு உருவாகும் என்றார்.