கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிரிகள் எளிதில் நெருங்க முடியாது: ஓய்வு பெற்ற விமானப்படை தளபதி
திருவனந்தபுரம்: கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு இந்திய விமானப்படை உரிய பாதுகாப்பு அளித்துள்ளது என்று நேற்று ஓய்வு பெற்ற தென்பிராந்திய விமானப்படை தளபதி எஸ்.பி. சிங் தெரிவித்தார்.
தென்பிராந்திய விமானப்படை தளபதியாக இருந்த எஸ்.பி. சிங் நேற்று ஓய்வு பெற்றார். அவருக்கு திருவனந்தபுரத்தில் உள்ள தென்பிராந்திய விமானப்படை மைதானத்தில் நேற்று பிரிவு உபச்சார விழா நடந்தது.
முன்னதாக புதிய தளபதியாக ஏர் மார்ஷல் ராகேஷ் குமார் ஜாலி பொறுப்பேற்றார்.
அவரிடம் பொறுப்பை ஒப்படைத்த பிறகு பேட்டியளித்த சிங் கூறுகையில்,
இந்திய விமானப்படை எந்த தாக்குதலையும் சமாளிக்கும் வகையில் தயார் நிலையில் உள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு விமானப்படை உரிய பாதுகாப்பு அளித்துள்ளது. அணுமின் நிலையத்தை எதிரிகள் எளிதில் நெருங்க முடியாத அளவுக்கு கண்காணிக்க ரேடார் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்றார்.