உ.பி.: எங்க ஊருக்கு ஏன் மழையில்லை?: விளக்கம் கேட்டு வருண பகவானுக்கு நோட்டீஸ் அனுப்பிய நபர்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் ஏன் ஒழுங்காக மழை பெய்யவில்லை என்று 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு வருண பகவானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடவுள் 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹர்டோய் மாவட்டத்தில் உள்ள சவயாஜ்பூருக்கு ஏன் மழை தரவில்லை என்று கேட்டு வருண பகவானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் சவயாஜ்பூர் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் சத்ய பிரகாஷ் சர்மாவின் கையொப்பம் உள்ளது. ஆனால் அது போலியானது. நோட்டீஸ் வைக்கப்பட்ட கவரில் பெறுநர் முகவரியில், சொர்க்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கவரில் உள்ள தபால் தலையும் போலியானது.
கடவுளுக்கு அனுப்பப்பட்ட அந்த நோட்டீஸில் கூறியிருப்பதாவது,
சவயாஜ்பூரில் அவ்வப்போது மேகம் வருகிறதே தவிர மழை பெய்யவில்லை. இதனால் இங்கு வறட்சி நிலவுகிறது. எனவே, சவயாஜ்பூருக்கு ஏன் மழை தரவில்லை என்று வருண பகவான் இன்னும் 3 நாட்களுக்குள் எழுத்து மூலமாக விளக்கம் அளிக்க வேண்டும். அவ்வாறு விளக்கம் அளிக்க தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நோட்டீஸை யார் அனுப்பினார் என்று தெரியவி்ல்லை. ஆனால் அது வருவாய்த்துறை கிளார்க் ஸ்வதந்திர குமாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸை அவரே கடவுளிடம் கொடுக்கமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதைப் பார்த்த குமார் அதிர்ச்சி அடைந்து தொழில்நுட்ப காரணங்களால் கடவுளிடம் கொடுக்க முடியவில்லை என்று திருப்பி அனுப்பிவிட்டார்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட நீதிபதி ஏ.கே. திவேதி இது குறி்த்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். நீதிபதி சத்ய பிரகாஷ் சர்மா விடுப்பில் இருப்பதால் அவர் வந்வுடன் அவரது அலுவலகத்தில் உள்ள யாராவது இவ்வாறு செய்தார்களா என்று விசாரி்க்குமாறு கேட்டுக் கொள்ளப்போவதாக திவேதி தெரிவித்தார்.