அதிமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை: விஜயகாந்த்
சிவகங்கையில் தேமுதிக சார்பில் ஏழைத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய அவர்,
என்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகள் செய்துள்ளேன். என்னால் முடிந்தவரை உதவி செய்கிறேன். இந்த பணமெல்லாம் நீங்கள் எனக்கு கொடுத்த பணம். உங்களுடைய பணம் உங்களுக்கே திரும்பி வருகிறது.
நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். நான் வேண்டுமானால் தலை குனிவேன். என் தொண்டர்களை தலை குனிய விடமாட்டேன். இப்போது மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். எந்த கட்சி என்று பார்க்கக் கூடாது. மக்கள் மக்கள் தான். உங்களுக்கு ஓட்டு போடாதவர்களையும் ஓட்டுப்போட வைப்பதுதான் புத்திசாலித்தனமாகும்.
தமிழகத்தில் ஏற்கனவே நடைபெற்ற திமுக ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. அதனால்தான் மக்கள் அதிமுக அரசை கொண்டு வந்தனர். ஆனால் இந்த ஆட்சியிலும் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. விலைவாசி உயர்வால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா அரசின் தவறுகளை பேசினால் என்னை கைது செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். இனி நான் எப்போதும் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்க மாட்டேன்.
இவ்வாறு நான் கூறுவதால் கருணாநிதியை ஆதரிக்கிறேன் என அர்த்தம் கொள்ள வேண்டாம். மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசாலும் மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை. நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால் உணவு தானியம் கையிருப்பு உள்ளதாக அரசு கூறுகிறது. இந்த அறிவிப்பால் யாருக்கும் என்ன பயன்.
தற்போது எங்கு பார்த்தாலும் மணல் கொள்ளையாக இருக்கிறது. மதுரையில் சகாயம் கலெக்டராக இருந்தபோது கிரானைட் ஊழல் பற்றி அறிக்கை அனுப்பினார். இப்போது பார்த்தால் கிருஷ்ணகிரியிலும் கிரானைட் ஊழல் என்கிறார்கள்.
இன்று ஊழல் செய்பவர்கள்தான் அதிகமாக உள்ளனர். இந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் கோகுல இந்திரா 20 சென்ட் ஆக்கிரமிப்பு செய்துள்ளார் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார் விஜய்காந்த்.
முன்னதாக ராமநாதபுரத்தில் மீனவர்களுக்கு உதவித் திட்டங்கள் வழங்கி பேசிய அவர்,
நான் தமிழகத்தில் மாவட்டம்தோறும் சென்று நலத்திட்ட உதவிகள் வழங்குவது பொறுக்க முடியாமல் வழக்கு போடுகிறார் ஜெயலலிதா. என்னை மக்கள் எளிதில் சந்திக்கலாம். ஆனால் ஜெயலலிதா கொடநாடு, சென்னை என எங்கிருந்தாலும் அவரை பார்க்க முடியாது; பேச முடியாது.
மத்திய அரசு செயல்படாத அரசு' என கூறியவர்தான் ஜெயலலிதா. இதேபோல்தான் மாநில அரசையும் நான் கூறினேன். நான் கூறினால் தவறா? ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததே தே.மு.தி.க.வின் உதவியால்தான்.
மக்கள் முன் மட்டுமே தலைவணங்குவேன். ஆனால் ஜெயலலிதாவுக்கு தலைவணங்கி 'ஆமாம்' போட எனக்குத் தெரியாது.
மணல் கொள்ளை, மலையை தோண்டி கிரானைட் கொள்ளை என மக்கள் வரிப்பணம் 16 ஆயிரம் கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மக்களின் நண்பர் போலீசார் அரசியல்வாதிகளுக்கு கார் கதவை திறந்து விடத்தேவையில்லை.
சகாயம், பாலாஜி போன்ற நேர்மையான கலெக்டர்கள் பக்கம் தான் மக்கள் உள்ளனர் என்றார்.
ஜெ அவதூறு வழக்கு-வழக்கறிஞர்களுடன் விஜய்காந்த் ஆலோசனை:
இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை சந்திப்பது குறித்து, கட்சியின் வழக்கறிஞர்களுடன் ராமநாதபுரத்தில் வைத்து விஜயகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார்.