ரஷ்யாவில் 10 ஆண்டுகளாக பாதாள அறையில் அடைப்பு: சூரியனை காணாத சிறார்கள்
கஜான்: ரஷ்யாவில் 1 முதல் 17 வயதுள்ள 20 சிறுவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பாதாள அறையில் உள்ளனர் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷியாவில் உள்ள டாட்டார்ஸ்டான் மாகாணம் கஜான் நகரைச் சேர்ந்தவர் பைஸ்ரஹ்மான் சடாரோவ்(83). தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லிக் கொள்ளும் அவர் தனது ஆதரவாளர்களை உலக நடப்பில் இருந்து விலகி இருக்குமாறு தெரிவித்தார். இதையடுத்து கடந்த 2000ம் ஆண்டு கஜானில் உள்ள ஒரு வீட்டுக்கு அடியில் பாதாள அறைகள் கட்டப்பட்டு 70 ஆதரவாளர்கள் அதில் குடியேறினர். இதில் 1 முதல் 17 வயதுள்ள சிறுவர்களும் அடக்கம்.
அவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சூரிய ஒளியைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பாதாள அறைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். இதை ரஷ்யாவின் வெஸ்டி என்ற தொலைக்காட்சி வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
ரஷ்ய நாட்டில் உள்ள 8 முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் கஜான் நகரமும் ஒன்றாகும்.வோல்கா, கஜான்கா நதிகள் சந்திக்கும் இடத்தில் அமைத்துள்ள நகரம் கஜான். இங்கு 1.5 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இஸ்லாமியர்களும், கிருஸ்தவர்களும் அமைதியான முறையில் வசித்து வருகின்றனர். கஜான் நகரில்தான் 2018 ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.