தற்கொலை படை மூலம் இம்ரான் கானை கொலை செய்வோம்- பாக்.தலிபான்கள் மிரட்டல்
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். தனது கிரிக்கெட் ஆட்டத்தின் மூலம் நாட்டு மக்கள் மனதை கவர்ந்தார். இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தஹ்ரீக்-இ-இன்சாப்(பிடிஐ) என்ற கட்சியின் மூலம் மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.
பிடிஐ கட்சியின் தலைவரான இம்ரான் கான், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்துவதை எதிர்த்து பேரணி நடத்த போவதாக அறிவித்தார்.
ஆனால் தான் ஒரு மதசார்பற்ற நபர் என்று அறிவித்துள்ள இம்ரான் கானின் பேரணிக்கு, பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களின் எதிர்ப்பை மீறி இம்ரான் கான் பேரணி நடத்தினால், மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி அவரை கொலை செய்துவிடுவோம் என்று தலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து தலிபான்கள் இயக்க செய்தி தொடர்பாளர் அஹ்சனுல்லா அஹ்சன் கூறியதாவது,
இம்ரான் கான் பேரணி நடத்த வந்தால் தற்கொலை படை மூலம் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி அவரை கொலை செய்வோம். பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் மேற்கு வரிசிஸ்தான் மாகாணத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களை அமெரிக்க படைகள் கொன்று குவித்து வருகிறது.
இதனால் அமெரிக்க படைகள் மீது நாங்கள் தாக்குதல் நடத்தி வருகிறோம். எங்களின் போராட்டத்திற்கு இம்ரான் கான் பரிதாபமோ, உதவியோ செய்ய வேண்டாம். அதை நாங்கள் ஏற்று கொள்ளமாட்டோம். எங்களுக்காக போராடி கொள்ள கடவுள் எங்களுக்கு உதவி செய்வார்.
இம்ரான்கான் சில மதவாதிகளுடன் சேர்ந்து கொண்டு மலைவாழ் மக்களுக்காக போராடப் போவதாக அறிவித்துள்ளார். இதன்மூலம் தன்னை ஒரு மலைவாழ் மக்களின் உதவியாளராக காட்டிக் கொள்ள இம்ரான் கான் முயற்சி செய்கிறார்.
தேர்தல் என்பது பிரிவினையின் ஒரு பகுதியாக உள்ளது. பாகிஸ்தானில் இஸ்லாமிய அரசின் ஆட்சி ஏற்பட நாங்கள் விரும்புகிறோம். அதற்கு தடையாக உள்ள பிரிவினை சக்திகளை தடுத்து நிறுத்துவோம் என்றார்.
தலிபான்களின் கொலை மிரட்டலை தொடர்ந்து, எல்லை பகுதிக்கு பேரணி நடத்தும் முடிவை இம்ரான் கான் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.