விஜயகாந்த் மீது கொலை மிரட்டல் புகார்
இது குறித்து ஜெயந்தியின் கணவர் ஆர்.மூர்த்தி சென்னை மாநகர காவல்துறை அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் விருகம்பாக்கம் பள்ளிக்கூட மெயின் ரோட்டில் குடும்பத்துடன் வசிக்கிறேன். நான் 20.12.2010 முதல் சட்டப்படி குத்தகைக்கு மேற்படி வீட்டில் குடியிருந்து வருகிறேன். நான் மேற்படி வீட்டிற்கு ரூ.2,25,000 குத்தகை தொகையாக டி.பேபியம்மாள் அவர்களிடம் டி.டி.யாக செலுத்தி உள்ளேன். மேலும் மேற்படி விலாசத்திற்குண்டான மின்சார கட்டணம், பராமரிப்பு செலவு, குடிநீர் கட்டணம் ஆகியவை எந்த ஒரு பாக்கியம் இல்லாமல் தவறாமல் செலுத்தி வருகிறேன்.
ஆனால் மேற்படி வீட்டின் உரிமையாளர் பேபியம்மாள் என்பவர் அவருடைய குடும்ப நபர்கள் மற்றும் ரவுடி ஆட்களுடன் வந்து 9.8.2012 அன்று காலை 8 மணி அளவில் என் வீட்டு கதவை வேகமாக தட்டி வீட்டை உடனே காலி செய்ய வேண்டும் என்று எங்களை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி விட்டு சென்று விட்டார்கள்.
மேலும் நாங்கள் தற்போது குடியிருந்து வரும் வீட்டு சம்பந்தமாக சென்னை 18வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு இவைகளையும் நாங்கள் தற்போது வசித்து வரும் வீட்டின் அனுபவத்தையும் எந்தவிதத்திலும் யார் மூலமாகவும் தலையிடக்கூடாது என்று இடைக்கால உறுத்து கட்டளை பெற்றிருக்கிறோம்.
மேலும் தற்போது வழக்கு நிலுவையில் உள்ள போது மேற்படி டி.பேபியம்மாள் எங்களிடம் மேலும் 1 லட்சம் ரூபாய் பணம் உடனே கொடுத்தால்தான் வீட்டில் குடியிருக்க முடியும். இல்லையென்றால் இன்றே வீட்டை காலி செய்ய வேண்டும் என்று சட்டவிரோதமாக மிரட்டி வருகிறார்.
எங்களை நாய்களை ஏவிவிட்டு டார்ச்சர் செய்து கொண்டு மிரட்டி வருகிறார்.
மேற்படி டி.பேபியம்மாள் தேமுதிக நிறுவன தலைவர் மற்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் மற்றும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் திமுக ஆதிசங்கரின் தூண்டுதலின் பேரிலும் எங்களை சட்ட விரோதமாகவீட்டை காலி செய்ய மிரட்டி வருகிறார்.
விஜயகாந்த் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் என் மனைவி எம்.ஜெயந்தி, விஜயகாந்த் எம்எல்ஏவாக வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி தேர்தல் வழக்கு தாக்கல் செய்து அது நிலுவையில் உள்ளது. மேலும் மேற்படி ஆதிசங்கர் மீதும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு கிரிமினல் வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்த தேர்தல் வழக்கை மேற்கொண்டு நடத்த விடாமலும் எங்களை சென்னையை விட்டே வெளியேற்ற சட்டவிரோதமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எங்களுடைய வீட்டின் மின் இணைப்பையும் 9.8.2012 காலை 8 மணி அளவில் துண்டித்து விட்டார்கள். எனவே உடனடியாக மேற்படி நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து நடவடிக்கை எடுக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
எனவே என்னுடைய கிரிமினல் புகார் மீது வழக்குப்பதிவு செய்து மேற்படி அனைத்து நபர்களையும் கைது செய்ய சம்பந்தப்பட்ட ஆர்.5 விருகம்பாக்கம் காவல் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்க பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். எங்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பு மேற்படி நபர்களே ஆவார்கள். எங்களது உயிருக்கு பாதுகாப்பு வழங்கவும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.