கிரானைட் கொள்ளையர்களும் அரசியல்வாதிகளும்.. பாவம், இவுங்க ரொம்ப நல்லவங்க!
தமிழகத்தில் கிரானைட் குவாரிகளில் பயங்கர மோசடிகள் நடப்பதும், அதற்கு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் துணையாக இருப்பதும் அனைவருக்கும் தெரியும்.
ஆனால், இவர்கள் மீது எந்த அரசும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. காரணம், யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை இந்த கிரானைட் கும்பல் நல்ல முறையில் கவனித்துவிடுவதே.
அதே போல ஆளும் கட்சி தோற்று எதிர்க் கட்சியாகிவிட்டாலும் கூட அவர்களையும் கூட இந்த கும்பல்கள் கவனித்துவிடுவதுண்டு.
லோக்கல் கவுன்சிலர், ஒன்றியச் செயலாளரில் ஆரம்பித்து மேல்மட்டம் வரை கிரானைட் கும்பல்களின் பணம் பாய்கிறது. அதே போல அதிகாரிகளையும் இவர்கள் கவனிப்பது உண்டு. இதனால், அவர்களும் அமைதி காத்து வருகின்றனர்.
ஆனால், சகாயம் மதுரை கலெக்டரான பிறகு தான் இந்த விவகாரத்தை கையில் எடுத்து ஆய்வு செய்ய ஆரம்பித்தார். இதனால் அவரை இந்த கிரானைட் லாபி தான் இடமாற்றம் செய்ய வைத்தது என்ற குற்றச்சாட்டும் உண்டு. குறிப்பாக மகா பிராடு பிஆர்பி கிரானைட் உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமி தான் சகாயத்தின் டிரான்ஸ்பருக்கே காரணம் என்போரும் உண்டு.
டிரான்ஸ்பர் ஆகிப் போனாலும் சகாயம் விடவில்லை. இந்த கிரானைட் மோசடி குறித்து தான் சேகரித்த அனைத்துத் தகவல்களையும் மாநில அரசிடம் ஒப்படைத்துவிட்டார். அந்த அறிக்கை வெளியிலும் லீக் ஆகிவிட்டது.
இதனால் இனியும் இந்த விஷயத்தில் அமைதி காக்க முடியாத நிலையில் மத்திய, மாநில அரசுகள் உள்ளன.
இது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று யாராவது நீதிமன்றத்தை நாடி, அதற்கு நீதிமன்றமும் அனுமதி தந்துவிட்டால் விவகாரம் ஆகிவிடும் என்பதால் தான் குவாரிகளில் சோதனை.. சீல் வைப்பு என 'நடவடிக்கைகள்' ஆரம்பித்துள்ளதாக சொல்கிறார்கள்.
அதாவது சகாயம் இதைக் கண்டுபிடித்து சொல்லாதவரை மதுரை மாவட்டத்தில் உள்ள 'ரொம்ப நல்ல' அரசியல்வாதிகளுக்கும், இதுவரை கலெக்டர்களாக இருந்தவர்களுக்கும், பிற அதிகாரிகளுக்கும் இந்த கிரானைட் மோசடி நடப்பதே தெரியாது என்பது போன்ற ஒரு பிரம்மையை உருவாக்க முயல்கின்றனர். இது தான் உண்மையிலேயே மாபெரும் மோசடி.
எது எப்படியோ அரசியல்வாதிகள்- அதிகாரிகளின் முழு ஆதரவுடன் நடந்து வந்த தமிழகத்தின் மாபெரும் மோசடியை சகாயம் என்ற தனி மனிதர் எந்த அதிகாரத்துக்கும் அஞ்சாயம் வெளியே கொண்டு வந்துள்ளார்.
ரெட்டி சகோதரர்கள் கர்நாடக-ஆந்திர மாநில சுரங்கங்களை ஸ்வாகா செய்து கோடிக்கணக்கில் லாபம் அடித்த விவகாரம் சிபிஐ வசம் போய் எதியூரப்பா வரை பலரும் சிக்கலில் மாட்டியது நினைவுகூறத்தக்கது.
அதே போல இந்த விவகாரத்தையும் சிபிஐ கையில் தந்தால் தான் இந்த விவகாரத்தில் நடந்துள்ள முழு அளவிலான ஊழல் வெளியே வரும். இதுவரை சொல்லப்படும் கணக்கின்படி தமிழகத்துக்கு இந்த கிரானைட் கும்பலால் ரூ. 1.2 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
இப்போது மதுரை தவிர கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் குவாரி உரிமையாளர்கள் மோசடி செய்து வருவதை கண்டுபிடித்துவிட்டார்களாம்.
இதையடுத்து கடந்த 3 நாட்களாக இந்த மாவட்டத்தில் உள்ள 123 கிரானைட் குவாரிகளில் மாவட்ட ஆட்சியர் சி.என்.மகேஸ்வரன் உத்தரவின் பேரில், சார்-ஆட்சியர் நிலையில் உள்ள அதிகாரிகள், 5 வருவாய் வட்டங்களில் உள்ள வட்டாட்சியர்கள் உள்பட வருவாய்த் துறை அதிகாரிகள் கிரானைட் குவாரிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனராம்.
ஜாமீன் கோரும் பி.ஆர்.பி:
இந் நிலையில் தொடரும் சோதனைகள் காரணமாக மதுரை, கிருஷ்ணகிரி பகுதிகளில் உள்ள குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
அரசு கனிமத்தை திருடியது தொடர்பாக சம்பந்தப்பட்ட கிராம அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் மதுரை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் கிரானைட் அலுவலகங்களில் போலீசார் நடத்திய சோதனையில் 21 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரசு கனிமத்தை திருடியதாக கிரானைட் அதிபர்களான பி.ஆர்.பழனிச்சாமி, அவரது மகன்கள் சுரேஷ் குமார், செந்தில் குமார், மருமகன் மகாராஜன், ஒலிம்பஸ் கிரானைட் இயக்குனரான மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி, நாகராஜ், சிந்து கிரானைட் அதிபர் செல்வராஜ் உள்பட 18 பேர் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பி.ஆர்.பழனிச்சாமி, மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி உள்ளிட்ட 6 பேர் முன் ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கிரானைட் அதிபர்கள் தப்பியோட்டம்:
இதற்கிடையே கிரானைட் அதிபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு பால கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது குவாரி அதிபர்கள் வெளி மாநிலங்களுக்கு தப்பி சென்று விட்டது தெரியவந்துள்ளது.