மும்பையில் திடீர் கலவரம்: 2 பேர் பலி, வாகனங்களுக்கு தீ வைப்பு
மும்பை: அசாம் வன்முறையைக் கண்டித்து மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 2 பேர் பலியாகினர். பல வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
அசாம் வன்முறையைக் கண்டித்து மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நண்பகல் 12 மணி முதல் மைதானத்திற்கு மக்கள் வரத் துவங்கினர். சில மணிநேரத்தில் மைதானத்தில் 5,000 பேர் கூடிவிட்டனர். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த அவர்கள் கருப்பு பேட்ஜ் குத்தி அசாம் இனக்கலவரத்திற்கு எதிராக கோஷமிட்டனர்.
அமைதியாக சென்று கொண்டிருந்த ஆர்ப்பாட்டம் பிற்பகல் 3.30 மணி அளவில் தீவிரமடைந்து கலவரம் வெடித்தது. கலவரக்காரர்கள் அங்கு நின்று கொண்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதையடுத்து போலீசார் தடியடி கலவரக்காரர்களை கலைந்து போகச் செய்தனர். இந்த கலவரத்தில் 2 பேர் பலியாகினர். அமைதியாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் திடீர் என்று கலவரம் எப்படி வெடித்தது என்றே தெரியவில்லை.
இது குறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் பிரித்விராஜ் சவான் கூறுகையில்,
இந்த கலவரம் குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துவார்கள். அவர்கள் ஏற்கனவே விசாரணையைத் துவங்கிவிட்டனர் என்றார்.
மும்பை கலவரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களை அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டுள்ள அவர் வதந்தியைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
அஸ்ஸாமிலிருந்து மும்பைக்கு கலவரம் பரவியுள்ளதால் மத்திய அரசு கவலையடைந்துள்ளது.