அடுத்தபடியாக, ரூ.57 லட்சம் செலவில் ஏழைகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள்!
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்துவதற்காக இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் கடந்த 2001-2002 ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டின்படி மிகவும் பின்தங்கிய மாவட்டங்களாகக் கண்டறியப்பட்ட பெரம்பலூர், சிவகங்கை, திருவண்ணாமலை, விழுப்புரம், தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் கடலூர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்கள் பயன் அடையும் வகையில் கூடுதலாக 1,600 இலவச தையல் இயந்திரங்களை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக அரசுக்கு 57 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவினம் ஏற்படும்.
இந்த இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மக்களுக்கு வாழ்வாதார நிலை மேம்பட வழிவகுக்கும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.