கருணாநிதிக்கு சின்ன ஜால்ரா போதும், ஆனால், ஜெயலலிதாவுக்கு... விஜயகாந்த் கிண்டல்

கரூரில் தேமுதிக சார்பில் கால்நடைகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய அவர்,
தமிழகத்தில் எல்லாத் துறைகளிலும் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. கடந்த திமுக ஆட்சியில் என்ன நடந்ததோ, அதே தான் அதிமுக ஆட்சியிலும் நடக்கிறது.
என்னுடைய ரிஷிவந்தியம் தொகுதியில் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. அதற்கு அரசு தடையாக உள்ளது.
தற்போது திமுகவினர் மீது நிலஅபகரிப்பு ஊழல் என்றால், வரும் காலத்தில் அதிமுகவினர் மீது குளம், குட்டை ஆக்கிரமிப்பு ஊழல் வரும்.
தமிழகத்தில் உள்ள கிரானைட் குவாரிகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டேன். ஆனால், தமிழக அரசு பதில் சொல்லவில்லை. ஆறுகளை தூர்வார ஒதுக்கப்பட்ட பணத்தை, ஆளுங்கட்சியினர் கொள்ளையடிக்கின்றனர்.
தமிழக மக்களுக்கு, மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. இதனால் தான் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தோம். தண்ணீர் அதிகம் வந்தால் திறந்து விடுவதற்காக தமிழகத்தை மற்ற மாநிலங்கள் வடிகாலாக மாற்றி விட்டன.
நேர்மையாக செயல்பட்ட கலெக்டர்கள் சகாயம், பாலாஜி ஆகியோர் அதிமுக ஆட்சியில் மாற்றப்பட்டுள்ளனர். இவர்களை மாற்ற அதிமுகவினருக்கு 150 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக மக்களுக்கு நல்லது செய்யும் கட்சியோடு தான் வரும் எம்.பி. தேர்தலில் தேமுதிக கூட்டணி வைக்கும். சங்மா, ஐஸ்வந்த் சிங் ஆகியோரை முதல்வர் ஜெயலலிதாவால் வெற்றி பெற வைக்க முடியவில்லை.
கர்நாடகத்தில் நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கில் வெற்றி பெறுவதுதான் ஜெயலலிதாவின் குறிக்கோளாக உள்ளது. திமுகவும் அதிமுகவும் மக்களை ஏமாற்றுகின்றனர். அவர்களுக்கு வரும் எம்.பி தேர்தலில் மக்கள் ஜீரோ போட வேண்டும்.
கருணாநிதிக்கு சின்ன ஜால்ரா போதும். ஆனால், ஜெயலலிதாவுக்கு செண்டை மேளம் மாதிரி, பெரிய ஜால்ரா போட்டால் தான் பிடிக்கும். ஆனால், நான் யாருக்கும் ஜால்ரா போட மாட்டேன்.
கரூரில் சாயப்பட்டரைகளில் ஆர்.ஓ. பிளாண்ட் அமைக்க அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. கரூர் நகராட்சித் தலைவர் செல்வராஜ் மற்றும் கலெக்டரிடம் எது கேட்டாலும் அமைச்சர் (மாவட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி) பார்த்துக் கொள்வார் என்கின்றனர். அப்படியென்றால் இவர்கள் ஏன் பொறுப்பில் இருக்கின்றனர் என்றார் விஜய்காந்த்.
பின்னர் நாமக்கல் மாவட்ட தேமுதிக சார்பில் கால்நடை மருத்துவமனைகளுக்கு உபகரண உதவிகள் வழங்கி நாமக்கல் குளக்கரை திடலில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய விஜய்காந்த்,
இங்கு நலத்திட்டமாக வழங்கப்படும் அனைத்தும் எனது தொண்டர்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கியது. எனது தொண்டர்கள் தன்மானம் மிக்க தொண்டர்கள். பிரதமர் மன்மோகன் சிங், இலவசங்கள் கூடாது என்கிறார். ஆனால், இலவசமாக செல்போன் கொடுப்போம் என்கிறார்.
அரசு அதிகாரிகள், மக்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்குவதை மறக்கக்கூடாது.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. என்னுடைய முதல் அஜெண்டா, கருணாநிதி கீழே இறங்க வேண்டும் என்பது தான். அதன்படி கருணாநிதியை கீழே இறங்க வச்சுட்டேன்.
வரும் 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், அதிமுக என்ன பாடுபடப் போவதுன்னு பார்க்கத்தான் போறீங்க. கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது எதுவும் செய்யாத கருணாநிதி, இப்போ டெசோ மாநாடு நடத்தி என்ன செய்யப் போகிறார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க வேணடும் என, வலியுறுத்துகிறோம். அதை இரண்டு கட்சிகளும் செய்யவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications