எஸ்.ஐ.யை பழிவாங்க ஓடும் பஸ்சில் 3 பயணிகளை குத்தி கொன்றேன்-கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்
சென்னை: காதலியை தன்னிடம் இருந்து பிரித்து வைத்த சப்-இன்ஸ்பெக்டரை பழிவாங்க திட்டமிட்டு, ஆந்திராவில் இருந்து சென்னை வந்த பஸ்சில் பயணித்த 3 பயணிகளை கொடூரமான முறையில் குத்தி கொலை செய்த கொலையாளியை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம், பத்ராசலத்தில் இருந்து கடந்த மாதம் (ஜூலை) 26ம் தேதி ஆந்திர மாநில அரசு சொகுசு பஸ் ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதிகாலை 4 மணியளவில் பஸ் தடா அருகே வந்த போது, பஸ் பயணிகளில் ஓடிசா மாநிலத்தை சேர்ந்த அஜய் விஸ்வாஸ்(26), ஆந்திராவை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் நிரஞ்சன்(35), வியாபாரி ராம்பாபு(58) ஆகிய 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
மேலும் கம்ப்யூட்டர் என்ஜினீயரான ரமேஷ் என்பவர் கத்தி குத்து மூலம் படுகாயம் அடைந்து மீட்கப்பட்டார். இது குறித்து பயணிகளிடம் விசாரித்த போது, பஸ்சில் பயணித்த ஒரு வாலிபர் கத்தி கொண்டு கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.
இது குறித்து ஆந்திர மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். இதற்காக நெல்லூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.வி.ரமணகுமார் உத்தரவின் பேரில் கூடூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் தடா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாச ரெட்டியின் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் ஒன்று வந்தது. இதில் உன்னை சிக்கலில் மாட்டிவிட்டு, பழி தீர்க்காமல் விடமாட்டேன் என்று தெரிவித்திருந்தது.
கொலை செய்யப்பட்ட 3 பயணிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த போது, சுமார் 7 சென்டிமீட்டர் ஆழத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் கொலையாளி ஒரு மருத்துவ துறையினர் பயன்படுத்தும் கத்தியை பயன்படுத்தி கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தடா சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாச ரெட்டியின் செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ் செய்தியை வைத்தும் விசாரணை தொடர்ந்தது.
இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடையதாக, ஆந்திரா மாநிலத்தின் விஜயவாடாவை அடுத்த நலகொண்டாவை சேர்ந்த சீனிவாசு(26) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில், 3 கொலைகளையும் செய்ததை ஒப்பு கொண்டார். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாச ரெட்டியை பழிவாங்கவே, கொலை செய்ததாக தெரிவித்தார்.
இது குறித்து சீனிவாசு, போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
நான் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் மருத்துவ பிரதிநிதியாக பணியாற்றி வந்தேன். அப்போது அங்குள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்த ஒரு பெண்ணை காதலித்தேன். எதிலும் பழிக்குப்பழி என்ற எனது எண்ணத்தை தெரிந்து கொண்ட அந்த பெண், என்னை வெறுத்துவிட்டு அவரது சொந்த ஊரான நெல்லூருக்கு சென்றுவிட்டார்.
காதலியின் பிரிவால் மனதளவில் விரக்தி அடைந்த நான் அவளை பின் தொடர்ந்து அவளது இருப்பிடத்திற்கே சென்றேன். இதனால் ஆத்திரம் அடைந்த அவளது பெற்றோர்கள் மனுபோலு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது அங்கு சப்-இன்ஸ்பெக்டராக இருந்த சீனிவாச ரெட்டி என்னை திட்டி பேசி என் காதலியை என்னிடம் இருந்து பிரித்து வைத்தார்.
இதனால் அவர் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவருக்கு தீராத தொல்லை கொடுக்க முடிவு செய்தேன். இந்த நிலையில் அவர் தடா போலீஸ் நிலையத்திற்கு பணிமாற்றமாகி வந்ததை அறிந்தேன். உன்னை சங்கடத்தில் ஆழ்த்தி, பழி தீர்க்காமல் விடமாட்டேன் என்று செல்போனில் அவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன்.
மேலும் என்னிடம் இருந்து எனது காதலியை பிரித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பழி வாங்கும் வகையில், அவரது காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தடா பகுதியில், ஓடும் பஸ்சில் மருத்துவ துறையில் பயன்படுத்தப்படும் கத்தியை கொண்டு 3 பேரை படுகொலை செய்தேன் என்று கொலையாளி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சீனிவாசுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.