அம்பேத்கரை அரசியல் நிர்ணயசபைக்கு அனுப்பியது இந்திய யூனியன் முஸ்லீம் லீக்: அப்துல் ரஹ்மான் எம்.பி.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் மாவட்ட அளவிலான இளைஞர் நாடாளுமன்ற போட்டி 30.08.2012 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக இறைவசனங்கள் ஓதப்பட்டது. நிகழ்ச்சிக்கு சீதக்காதி டிரஸ்ட் செயலாளர் அல்ஹாஜ் காலித் ஏ.கே. புஹாரி தலைமை வகித்தார். முதல்வர் சுமையா தாவூத் வரவேற்புரை நிகழ்த்தினார்.
துபாய் ஈடிஏ மார்சல் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் எஸ்.எம்.புஹாரி சிறப்பு விருந்தினர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மானுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கி கௌரவித்தார்.
கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி, செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி, கமுதி தேவர் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளின் மாணவிகள் பங்கேற்ற மாவட்ட அளவிலான இளைஞர் நாடாளுமன்ற போட்டி நடைபெற்றது.
கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்த பிரச்சனைகளை மாணவிகள் இளைஞர் நாடாளுமன்றத்தில் அலசினர். கருத்து விவாதங்கள் சிறப்புற நடைபெற்றன. மாணவியர் மத்தியில் நாடாளுமன்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி நடந்தது.
அப்துல் ரஹ்மான் எம்.பி, அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி ஆகியோர் போட்டியின் நடுவர்களாக செயல்பட்டனர்.
அப்துல் ரஹ்மான் எம்.பி. தனது விழாப் பேருரையில், மாணவியர் சபாநாயகராக, அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக தங்களது தலைமைப் பண்பினை வெளிப்படுத்தும் வகையில் சிறப்புற செயல்படுத்திக் காட்டியதை வெகுவாகப் பாராட்டினார். இது போட்டியோடு இருந்து விடாது அமைச்சராக ஆகும் நிலையை அடைய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறிய கனவு காண்பது குறித்து விவரித்தார். சிறு சிறு தவறுகளை திருத்திக் கொண்டு எதிர்காலத்தில் சிறந்த முறையில் செயல்பட பாராட்டினார்.
கீழக்கரையில் இளைஞிகளின் நாடாளுமன்றம் எவ்வித வெளிநடப்பும் இன்றி நடந்துவிட்டது. ஆனால் டெல்லியில் நடைபெற வேண்டிய நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒரு சிலரின் பிடிவாதப் போக்கின் காரணமாக நடைபெறாமல் இருப்பது வருத்தத்திற்குரியது என்றார். சட்டமேதை அம்பேத்கரை அரசியல் நிர்ணயசபைக்கு அனுப்பியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் என்று தெரிவி்த்தார்.
நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டது எப்படி, லோக்சபா, ராஜ்யசபாவிற்கு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படும் முறை, பதவியேற்கும் முறை உள்ளிட்டவற்றை ஆசிரியர் பாடம் நடத்துவது போல் மாணவிகளுக்கு விவரித்தார். நாடாளுமன்றத்தை அனைவரும் காண வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார். அதற்கான ஏற்பாடுகளை தானே செய்வதாக உறுதியளித்தார்.
சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வரிடம் சமூக சேவைக்கான சிறப்பு விருது பெற்ற தாசிம்பீவி கல்லூரி முதல்வர் சுமையா தாவூதினை பாராட்டி அனைவரும் எழுந்து நின்று கரவோசை எழுத்தி வாழ்த்து தெரிவிக்கக் கூறினார். கல்வி வள்ளல் அல்ஹாஜ் பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்களின் சிந்தனையில் உருவாக்கப்பட்ட இந்நிறுவனத்தில் பயில்வோர் சகோதரத்துவத்துடன் செயல்பட்டு சிறப்பான நிலையினை அடைய வாழ்த்தினார்.
போட்டிகளில் வென்றவர்களுக்கு கேடயமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி, பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான், துபாய் மண்டலச் செயலாளர் முதுவை ஹிதாயத், மக்கள் தொடர்பு செயலாளர் ஹமீது யாசின், ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் வருசை முஹம்மது, பொது மேலாளர் ஷேக் தாவூது பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், தாய்ச்சபை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.