தீபாவளிக்கு சட்டவிரோதமாக பட்டாசுகளைச் 'சுட்டுக் குவிக்கும்' 33% தொழிற்சாலைகள்!
முறையான அனுமதி, உரிமம் இல்லாமல் இந்த 33 சதவீத பட்டாசுத் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றனவாம். இவற்றில் திறன் இல்லாத தொழிலாளர்களே பயன்படுத்தப்படுகின்றனர். எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் இவர்கள் பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதால் மேலும் மேலும் பல பேராபத்துக்கள் சுற்றிக் கொண்டே இருப்பதாக மக்களும், அதிகாரிகளும் குற்றம் சாட்டுகின்றனர்.
இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகளை புரோக்கர்கள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்கின்றனராம். முன்கூட்டியே ஆர்டர் வாங்கிக் கொண்டு இந்த சட்டவிரோத பட்டாசுத் தொழிற்சாலைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றனவாம்.
இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் தரக் குறைவானவை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் பிரபல நிறுவனங்களின் போலி முத்திரைகள் அடங்கிய பெட்டிகளில் வைத்து இவற்றை விற்பனைக்கு அனுப்பி பெரும் மோசடியிலும் இந்த சட்டவிரோத பட்டாசுத் தொழிற்சாலைகள் ஈடுபட்டுள்ளனவாம்.
சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் பட்டாசுகள் பெரும்பாலும் கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனவாம்.
மேலும் தீபாவளி சமயத்தின்போது, இந்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் குழுக்களாக பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பட்டாசுகள் விற்பனையில் ஈடுபடுவதும் உண்டாம்.
இங்கு தயாரிக்கப்படும் சட்டவிரோத பட்டாசுகள், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் கூட கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
சட்டப்படியான உரிமம் பெற்று நடத்தப்படும் பட்டாசுத் தொழிற்சாலைகள் செய்யும் வியாபாரத்திற்குச் சமமாக இந்த சட்டவிரோத பட்டாசுத் தொழிற்சாலைகளும் வியாபாரத்தில் ஈடுபடுகின்றன என்று போலீஸாரே குற்றம் சாட்டுகிறார்கள்.
அதிகாரிகள் என்னதான் செய்கிறார்களோ....?