90 ரூபா சம்பளம்.. உயிர் போகும்...வேறு வழியில்லை.. கண்ணீரில் புலம்பும் பட்டாசுத் தொழிலாளர்கள்!
சுற்றிலும் டெட்டனேட்டர்களையும், பயங்கர குண்டுகளையும் வைத்து விட்டு நடுவில் உட்கார்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட உங்களால் முடியுமா... அப்படிப்பட்ட கொடுமையான சூழலில்தான் இந்த சிவகாசி பட்டாசு ஆலைத் தொழிலாளர்களின் நிலை உள்ளது. எப்போது உயிர் போகும், என்ன ஆவோம் என்றே தெரியாத உறுதியற்ற வாழ்க்கைச் சூழலில் இவர்கள் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு விநாடியையும் கழித்து வருகிறார்கள். இப்படி வாழ்ந்துதான் ஆக வேண்டுமா என்று கேட்கலாம்... ஆனால் இவர்களுக்கு வேறு வழியில்லை.
பட்டாசுத் தொழிற்சாலைளில் வேலை பார்ப்போர் பெரும்பாலும் இளம் வயதுப் பெண்களும், வேறு எங்கும் போய் வேலை பார்க்க முடியாத பெண்களும்தான். சிறார்களும் இதில் ஏராளம். இவர்கள் அனைவருமே படிப்பறிவில்லாதவர்கள். எப்படி குதிரைக்கு முகப் படாம் போட்டு ஆரம்பத்திலிருந்தே பார்வையை பழக்கி விடுகிறார்களோ, அதேபோலத்தான் இந்த அப்பாவி மக்களையும் ஆரம்பத்திலிருந்தே பட்டாசு வேலைக்கு மட்டுமே போக வேண்டும், போக முடியும் என்ற ரீதியில் பழக்கி விட்டு விடுகிறார்கள். இதனால் இவர்களுக்கு சிவகாசியைத் தாண்டி வேறு ஊரைச் சிந்திக்க முடியாது. பட்டாசைத் தாண்டி வேறு எந்த தொழிலையும் நினைத்துதப் பார்க்க முடியாது, தெரியாது.
சாத்தூரைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. 18 வயதுதான். ஆனால் இவர் அனுபவம் மிக்க ஒரு பட்டாசுத் தொழிலாளி ஆவார். பட்டாசை இவர் ஒட்டும் விதமும், வேகமும் புதிதாக பார்க்கும் யாரையும் மலைத்து அசரடித்து விடும். அப்படி ஒரு மின்னல் வேக வேலைப்பாடு இவரது கைகளில் புழங்குகிறது.
பட்டாசுத் தொழிற்சாலை வாழ்க்கை குறித்து செல்வி கூறுகையில், எனக்கு தினசரி 90 ரூபாய்தான் சம்பளம் தருவாங்க சார். எட்டு மணி நேரம் அந்தப் பக்கம், இந்தப் பக்கம் நகராமல் வேலை பார்க்க வேண்டும். ஒரு நாளைக்கு இத்தனை என்று பட்டாசுகளையும் ஒப்படைத்து விடுவார்கள். அதை முடித்தாக வேண்டும்.
எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் சிவகாசியை விட்டால் வேறு எதுவும் தெரியாது. நினைவு தெரிந்த நாளாக பட்டாசுத் தொழில்தான் செய்து வருகிறேன். வேறு வழியில்லை. என்னுடைய சம்பளம்தான் என் வீட்டில் அடுப்பு எரிய உதவுகிறது. உயிராபத்து நிறைய இருக்கிறதுதான். ஆனால் வேறு வழியில்லையே... என்கிறார் அப்பாவியாக.
கண்ணன் என்ற தொழிலாளி, நாங்கள் ரொம்ப நாட்களாகவே எங்களுக்குப் பாதுகாப்பு கோரி கோரிக்கைகள் விடுத்தபடிதான் இருக்கிறோம். ஆனால் முதலாளிகள் அதைக் கண்டு கொள்வதே இல்லை. இப்படி ஏதாவது விபத்து நடக்கும்போதுதான் அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லாம் வருகிறார்கள். ஆனால் போன வேகத்தில் மறந்து விடுகிறார்கள். மறுபடியும் நாங்கள் எங்களது கவலைகளைத் தூக்கிப் போட்டு விட்டு இந்த கந்தகத்தில்தான் உழல வேண்டும். விதி என்பதைத் தவிர இதற்கு வேறு என்ன பெயர் சார் வைக்க முடியும் என்றார் கண்களில் கோபம் கொப்பளிக்க.
இப்படி குமுறிக் கொண்டிருக்கும் உள்ளங்கள்தான் சிவகாசி, சாத்தூர், திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் உள்ளன. ஆனால் அதைத் தாண்டி இவர்களால் ஒன்றுமே செய்ய முடியாத மிகச் சோகமான அவல நிலை.
எங்களை எந்த அவல நிலையிலிருந்து அரசும், அதிகாரிகளும்தான் மீட்க வேண்டும் என்று ஒரே குரலில் கோரிக்கை வைக்கின்றனர் இந்த அப்பாவித் தொழிலாளர்கள்.
இது அரசு சற்று சீரியஸாக சிந்திக்க வேண்டிய கோரிக்கை!