பல் மருத்துவ நுழைவுத் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை: பல் மருத்துவ படிப்புகளுக்கான இளநிலை மற்றும் முதுகலை அளவில் அகில இந்திய பொது நுழைவு தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
பி.டி.எஸ்., எம்.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு தேசிய அளவில் தகுதி பொது நுழைவு தேர்வு நடத்த அகில இந்திய பல் மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளதாக எனது கவனத்துக்கு தெரிய வந்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.
ஏற்கனவே நான் 30.7.2012 அன்று எழுதிய கடிதத்தில் இதே காரணத்திற்காக எனது ஆட்சேபனையை தெரிவித்து இருந்தேன். கடந்த 2005ம் ஆண்டில் இருந்து தொழில் படிப்புகளுக்கு நுழைவு தேர்வு நடத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, 2007-08ம் ஆண்டில் இருந்து நுழைவு தேர்வு நடத்துவதை நிறுத்தி உள்ளது.
கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நிபுணர் குழு கொடுத்த அறிக்கையின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நுழைவு தேர்வுக்காக நடத்தப்படும் பயிற்சி மையங்களுக்கு ஏழை மாணவர்களால் அதிக கட்டணம் கொடுக்க முடியவில்லை என்பதையும் நான் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தேன்.
சமூக நீதி கொள்கைபடி தமிழகத்தில் 69 சதவீதம் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் தேசிய அளவில் தகுதி பொது நுழைவு தேர்வு நடத்தினால் அது குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும் இடஒதுக்கீடு கொள்கையை சுமூகமாக அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்படும்.
எனவே பல் மருத்துவ படிப்புகளுக்கான இளநிலை மற்றும் முதுகலை அளவில் அகில இந்திய பொது நுழைவு தேர்வை நடத்துவதை தமிழக அரசு வன்மையாக எதிர்க்கிறது. இந்த பொது தகுதி நுழைவு தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.