எலி, நாய், பூனையை விரட்டுவது எங்கள் வேலை அல்ல: அரசு டாக்டர்கள் சங்கம்
இது குறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திருவல்லிக்கேணி கஸ்தூரிபா தாய்-சேய் நல மருத்துவமனையில் (கோஷா மருத்துவமனை) இறந்த குழந்தையை எலி கடித்த சம்பவம் தொடர்பாக ரமேஷ், பார்த்திபன் என்ற இரண்டு டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டும் தான் டாக்டர்கள் கடமை. மருத்துவமனையில் சுற்றித் திரியும் எலி, நாய், பூனை போன்ற விலங்கினங்களை விரட்டுவது டாக்டர்களது பணி அல்ல.
மருத்துவமனைக்கு உள்ளே தூய்மை பணிக்கு ஹவுஸ் கீப்பிங்கும், வெளியே பொதுப்பணித் துறையும்தான் பொறுப்பு. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் 2 டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் நியாயமானது அல்ல. எனவே, அவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை அரசு ரத்து செய்ய வேண்டும். அவர்களை மீண்டும் அதே இடத்தில் பணியில் அமர்த்த வேண்டும்.
இதே போன்று எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியில் இல்லாததாகக் கூறி டாக்டர் பசுபதி என்பவருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அதே மருத்துவமனையில் முக்கிய அறுவை சிகிச்சையில் டாக்டர் பசுபதி ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது.டாக்டர் பசுபதிக்கு மெமோ கொடுக்கப்பட்ட சில தினங்களுக்கு முன்னர் தான், அவர் சேவையை பாராட்டி சிறந்த டாக்டருக்கான விருது வழங்கப்பட்டது.
2 டாக்டர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யாவிட்டால் மாநில செயற்குழுவை கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றார்.
தங்களது கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவி சாய்க்காத பட்சத்தில் அரசு டாக்டர் சங்கம் போராட்டத்தில் குதிக்கலாம் என கூறப்படுகின்றது.