சம்பள பாக்கியை கேட்ட ஊழியரின் கையை வெட்டிய மதுக்கடை உரிமையாளர்
கார்வா(ஜார்க்கண்ட்): ஜார்க்கண்டில் கடந்த ஓராண்டாக வழங்காமல் உள்ள சம்பள பாக்கியைக் கேட்ட ஊழியரின் கையை கடை உரிமையாளர் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டத்தில் உள்ள சுக்நாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆலியார் ராஸ்வர்(40). அவர் அப்பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் வேலை பார்த்தார். அவரது வருமானத்தை நம்பி தான் அவரது மனைவி, 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். கடந்த ஓராண்டு காலமாக அவருக்கு சம்பளம் வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.
இதையடுத்து அவர் கடந்த சனிக்கிழமை கடை உரிமையாளர் லால் மணியிடம் தனது சம்பள பாக்கியான ரூ.10,000த்தை கொடுக்குமாறு கேட்டார். அதற்கு அவர் சம்பளத்தை கொடுக்காமல் ஆலியாரின் இடது கையை வெட்டி அவரை அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் போட்டுவிட்டார். அந்த வழியாகச் சென்ற கிராமத்தினர் பார்த்து ஆலியாரை சதார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் உயர் சிகிச்சைக்காக ரான்ச்சியில் உள்ள ராஜேந்திர இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த மாஜ்ஹியோன் போலீசார் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 3 குற்றவாளிகளில் ஒருவரை கைது செய்தனர், மீதமுள்ள இருவரை தேடி வருகின்றனர். ஆனால் கைது செய்யப்படடவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.