வெங்கடாசலபதிக்கு 90 நிமிடம் ஓய்வு தர தேவஸ்தானம் முடிவு
இந்தியாவின் பணக்கார தெய்வம் என்ற பெருமை திருமலை வெங்கடாசலபதிக்கு உண்டு. தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு வருகின்றனர். புரட்டாசி மாதம் என்பதால் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் கோவில் நடையை அடைக்காமல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு சில நாட்களில் மட்டும், அதிகாலையில், 10 நிமிடங்கள் மட்டும் நடை அடைக்கப்படுகிறது. மற்ற நேரங்களில், பக்தர்கள் தரிசனம் எந்த நேரத்திலும் தரிசனம் செய்யலாம்.
ஆகம விதிகள்
கோவில் நடையை அடைக்காமல் இருப்பது ஆகம விதிகளுக்கு எதிரானது என, புகார் எழுந்தது. எந்நேரமும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிப்பதற்கு சில பண்டிட்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து, ஆலோசனை நடத்திய தேவஸ்தான நிர்வாகம், சில முடிவுகள் எடுத்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
வெங்கடாஜலபதி கோவிலில், ஆகம விதிமுறைகளை இனி முழுமையாக பின்பற்றுவது என, முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இனிமேல், தினமும் அதிகாலை, 1:30க்கு கோவில் நடை சாத்தப்படும். இதன்பின், அதிகாலை, 3:00 மணிக்கு தான், நடை திறக்கப்படும். தினமும், 90 நிமிடங்கள், கண்டிப்பாக கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும். இவ்வாறு, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆண்டுதோறும் 1,700 கோடி ரூபாய் வருவாயை அள்ளித்தரும் பணக்கார தெய்வத்திற்கு இனி ஒன்றரை மணிநேரம் ஒய்வு கிடைக்கும். இதன்காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கும் நேரம் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
லட்டு பற்றாக்குறை
இதனிடையே திருமலையில் ஆகம விதிப்படி கோவிலில் உள்ள மடப்பள்ளியில் லட்டு தயாரிக்கப்படுகிறது. இங்கு தினமும் 3 சிப்ட் பணியாளர்கள் வைத்து 24 மணி நேரம் செயல்பட்டாலும், 2 லட்சத்துக்கு மேல் லட்டு தயாரிக்க முடியவில்லை. இதனால் பக்தர்களுக்கு தேவையான லட்டு வழங்க முடியவில்லை.
தற்போதுள்ள விலைவாசியில் 1 லட்டு தயாரிக்க 30 ரூபாய் செலவாகிறது. ஆனால் கோவில் நிர்வாகம் ரூ.10 மற்றும் ரூ.25 விலையில் லட்டு வழங்குவதால் தினமும் ரூ.21 லட்சம் கூடுதல் செலவாகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.130 கோடி வருமானம் இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பக்தர்களுக்குத் தேவையான லட்டு தயாரிக்க மடப்பள்ளியில் இடப்பற்றாக்குறை நிலவுகிறது. இதனை விரிவுபடுத்தினால் கோவில் பிரகாரம் சேதமடையும் என கூறப்படுகிறது. இருப்பினும் வெளியில் லட்டு தயாரிக்க கோவில் நிர்வாகம் ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.