ஹரியானாவில் கற்பழிக்கப்பட்ட பெண்களின் வீட்டுக்கு சோனியா நேரில் சென்று ஆறுதல்
ஜிந்த்: ஹரியானா மாநிலத்தில் தொடரும் பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஹரியானா மாநிலத்தின் ஹிஸ்ஸார் மாவட்டத்தில் உள்ளது தப்ரா கிராமத்தைச் சேர்ந்த 16 வயது தலித் பெண் செப்டம்பர் 9ம் தேதி 12 பேர் அடங்கிய கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். எட்டு பேர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தபோது அக்கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் அதனை செல்போனில் பதிவு செய்து அதை வெளியே பரவச் செய்தனர்.
இதனையடுத்து குற்றவாளிகளின் மீது நடவடிக்கைக் கோரி அந்த இளம் பெண்ணின் தந்தை போலிசில் புகார் கொடுத்தும் போலீசார் அதனை ஏற்கவில்லை. இதனால் இளம் பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து தப்ரா கிராமத்தைச் சேர்ந்த தலித் மக்கள் தற்கொலை செய்து கொண்ட தந்தையின் உடலை பெறாமல் ஹிஸ்ஸார் நகரத்தில் 5 நாட்களுக்கும் மேலாக போரடினர்.
இதன்பின்னரே போலீஸ் ஒருவரைக் கைது செய்தும் ஏனையோரை விரைவில் கைது செய்வதாக உறுதிமொழி அளித்ததும் போராட்டத்தை கைவிட்டுவிட்டு உடலை பெற்றுக் கொண்டனர், மக்கள். மாநில அரசு வழக்கம் போல நிதி நிவாரணத்தை அளிப்பதாக அறிவித்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 13 பாலியல் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மர்ம கும்பலால் கற்பழிக்கப்பட்ட தலித் பெண் தீக்குளித்தது மற்றொரு மாவட்டத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தற்கொலை செய்தது என பல சம்பவங்கள் ஹரியானாவில் அரங்கேறியுள்ளது.
இந்த இரண்டு சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் பாதிப்பிற்குள்ளான குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கும் பொருட்டும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அம்மாநிலத்திற்கு சென்றுள்ளார். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் கற்பழிப்பு சம்பங்கள் அதிகரித்துள்ளமைக்கு பெண்களின் எண்ணிக்கை குறைவும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் என கூறப்பட்டது. இதனால் 16 வயது நிரம்பிய பெண்களுக்கு விரைவில் திருமணம் செய்துவைக்கும் படியான யோசனையை கிராமத்து பஞ்சாயத்தார்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்கு பதிலளித்த சோனியா பாலியல் திருமணங்கள் ஏற்புடையதல்ல என்று கூறினார்.
ஊடகங்களில் பரபரப்பாக செய்தி வெளியான பின்னரே இது தேசியத்தலைவர்களின் காதுகளை எட்டியுள்ளது. ஆனால் மாநில முதலமைச்சர் பூபீந்தர் சிங் ஹூடா இதுவரை சரியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதுதான் வேதனை.