உல்லாசத்திற்கு ஆள் தேவையா.. ஆன்லைனில் வலை விரித்து பணம் பறித்தவர் கைது!
திருச்சி: உல்லாசமாக இருக்க எங்க கிட்ட வாங்க என்ற ரீதியில் இணையதளம் மூலம் வலை விரித்து நூதன முறையில் பண மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சி ராஜா காலனி பகுதியை சேர்ந்தவர் அன்பரசு. 26 வயதான இவர் இணையதளம் ஒன்றை பிரவுஸ் செய்து கொண்டிருந்த போது ஒரு விளம்பரத்தைப் பார்த்தார். அதில், உல்லாசத்திற்கு அழகிகள் அனுப்பி வைக்கப்படும் என்று குறிப்பிட்டு ஒரு செல்போன் எண்ணும் இருந்தது. இதையடுத்து நப்பாசையில் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டார் அன்பரசு. அப்போது மறு முனையில் சரவணன் என்பவர் பேசி ரூ. 4000 முதல் 6000 வரை ஆள் இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும், ஒரு வங்கிக் கணக்கு எண்ணைக் குறிப்பிட்டு அதில் பணத்தைப் போட்டு விட்டால் ஆள் உங்களைத் தேடி வரும் என்றும் கூறியுள்ளார்.
உடனே குஜாலான அன்பரசு, எனக்கு 6000 ரூபாய்க்கு நல்ல பெண் தேவை என்று கூறி விட்டு அந்தப் பணத்தையும் போய் கட்டியுள்ளார். மறுபடியும் சரவணனை தொடர்பு கொண்டபோது அவர் நைசாகப் பேசி நழுவிவிட்டார். இதனால் ஏமாந்து போனார் அன்பரசு.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போய் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். மேலும் போலீஸாரின் ஆலோசனைப்படி மறுபடியும் சரவணனைத் தொடர்பு கொண்ட அன்பரசு, அவரிடம் நைச்சியமாக பேசி திருச்சிக்கு வரவழைத்தார். அப்போது அவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
கமிஷனர் அலுவலகத்திற்கு அவரை அள்ளிக் கொண்டு விசாரித்தபோது அவர் சேலம் மாவட்டம் இடைப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. பலரிடம் இதுபோல அவர் பணம் பறித்ததும் தெரிய வந்தது. சரவணனுக்கு மேலும் 2 கூட்டாளிகளும் உள்ளனராம். அவர்களையும் பிடிக்க போலீஸார் வலை வீசியுள்ளனர்.
இந்தக் கும்பல் பெண்களை வைத்து உண்மையிலேயே தொழில் நடத்துகிறதா, வேறு ஏதாவது சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறதா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.