பண தகராறில் பள்ளி மாணவன் கடத்தல்-பாதிரியார் உட்பட 3 பேர் மீது புகார்
சென்னை: சென்னையில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான தகராறில் பள்ளி மாணவனை கடத்தியதாக, பாதிரியார் உட்பட 3 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐ.சி.எப். ரயில்வே குடியிருப்பு 6வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ்பாபு(45). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் லிடியா(40). இவர்களின் மகன் ஜேக்கப் சுதிர்(14). அதே பகுதியில் உள்ள ஐ.சி.எப். ரயில்வே மெட்ரிக்லேஷன் மேல்நிலை பள்ளியில் படித்து வருகிறார்.
நேற்று காலையில் வழக்கம் போல ஜேக்கப் சுதிர் பள்ளிக்கு சென்றார். சுரேஷ் பாபு தொழில் தொடர்பாக வெளியே புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் மதியம் 2.30 மணி அளவில் சுரேஷ் பாபுவின் வீட்டிற்கு போன் செய்த மர்மநபர், லிடியாவை மிரட்டினார்.
போனில் பேசிய மர்மநபர், காலையில் பள்ளிக்கு சென்ற ஜேக்கப் சுதீரை காரில் கடத்தி சென்றதாகவும், அவனை திரும்ப உயிருடன் பார்க்க, சுரேஷ் பாபு தர வேண்டிய ரூ.10 லட்சம் பணத்தை உடனடியாக தர வேண்டும் என்றும் கூறினார். மேலும் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தால், ஜேக்கப் சுதிரை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதை கேட்டு பயந்து போன லிடியா, உடனடியாக இது குறித்து ஐ.சி.எப் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், போலீஸ் உதவி கமிஷனர் கிருஷ்ணசாமி தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது.
கடத்தப்பட்டதாக கூறப்படும் மாணவன் ஜேக்கப் சுதீர் படிக்கும் பள்ளி அருகே உள்ள பகுதியில் போலீசார் விசாரித்தனர். இதில் ஜேக்கப் சுதீரை காலை 9 மணியளவில் நீல நிறத்திலான காரில் சிலர் ஏற்றி சென்றதாக தெரியவந்தது.
இந்த நிலையில் மீண்டும் போனில் தொடர்பு கொண்ட மர்மநபர்கள், ஜேக்கப் சுதீரை தற்போது ஆந்திராவில் அடைத்து வைத்திருப்பதாகவும், ரூ.10 லட்சம் பணம் தயாராகிவிட்டதா என்றும் கேட்டனர்.
போலீசாரிடம் லிடியா அளித்த புகாரில் பெரம்பூரை சேர்ந்த பாதிரியார் பிரகாஷ், ஆந்திராவை சேர்ந்த நாகேஷ்வரராவ் ரெட்டி, வினய் ஆகிய 3 பேர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். போலீசாரின் விசாரணையில் ஜேக்கப் சுதீர் தற்போது ஆந்திராவில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் பேரில் தனிப்படை போலீசார் காளகஸ்தி மற்றும் நெல்லூர் பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications