வீட்டில் நகை திருடிய பெண்ணை மன்னித்து ஜாமீனுக்கும் உதவிய சாப்ட்வேர் என்ஜினியர்
பெங்களூர்: தமது வீட்டில் நகை திருடிய வேலைக்காரப் பெண்ணை மன்னித்து அவருக்கு ஜாமீன் கொடுத்து சிறையிலிருந்து மீட்டிருக்கிறார் பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர்.
பெங்களூரைச் சேர்ந்த 32 வயது பிரிஜேஸும் அவரது மனைவியும் அல்சூர் பகுதியைச் சேர்ந்த கோகிலா என்ற பெண்ணை தமது வீட்டில் வேலைக்கு சேர்த்திருந்தனர். கோகிலா மீது கணவனும் மனைவியும் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தனர். கோகிலாவிடம் வீட்டின் ஒரு செட் சாவியையும் கொடுத்து வைத்திருந்தனர்.
இந்த நிலையில் பிரிஜேஸின் வீட்டில் இருந்த நகைகள் சிறிது சிறிதாக காணாமல் போய் வந்திருக்கிறது. மொத்தம் ரூ3.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் காணாமல் போய்விட்டன. இது தொடர்பாக போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது. பிரிஜேஸின் வீட்டுக்கு வந்து போகும் ஒரே வெளியாள் கோகிலாதான் என்பதால் அவர் மீது போலீசார் சந்தேகித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கோகிலாதான் நகைகளைத் திருடியது தெரியவந்தது. திருடிய நகைகளை அடகுக் கடையில் கொடுத்து பணமாக்கி அதை சிட் பண்டில் முதலீடு செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் கோகிலாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோகிலாவின் கணவர் ஒரு நெசவுத் தொழிலாளி. அவரது குழந்தைகள் அனைத்தும் 10 வயதுக்கு குறைவானவர்கள். தாயார் சிறைக்குச் சென்றுவிட்ட நிலையில், அந்தக் குழந்தைகள் படாதபாடு பட்டுள்ளனர்.
இது குறித்து அந்தக் குழந்தைகளுடன் வந்து கோகிலாவின் கணவர் கதறியளவே, பிரிஜேஸும் ஆத்திரப்படாமல் திருடிய நகைகள் கைக்கு வந்தவுடன் நிச்சயம் உதவி செய்வதாகக் கூறியிருக்கிறார்.
பின்னர் போலீஸ் உதவியுடன் நகைகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதையடுத்து போலீசாரிடம் கோகிலாவை விடுவிக்குமாறு பிரிஜேஸ் கேட்டுக் கொண்டதோடு, கோகிலாவின் ஜாமீனுக்கான தொகையையும் அவரே கட்டி வெளியே கொண்டு வந்திருக்கிறார்.
சாப்ட்வேர் என்ஜினியர்கள் என்றாலே "சாப்ட்'மனசு தானோ!