சேது கால்வாய் திட்டத்தை தமிழக அரசு கைவிடக் கூடாது: ராமதாஸ்
சென்னை: தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவும் சேது கால்வாய் திட்டத்தை தமிழக அரசு முடுக்கிவிட கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வங்க கடலில் சேது கால்வாயின் பாதையில் உள்ள மணல் திட்டை ராமர் பாலமாக அறிவிக்க வேண்டும் என்றும், இந்த பாலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், சேது கால்வாய் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்பதால் அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டத்தை தமிழக அரசே முடக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது. தமிழர்களின் 150 ஆண்டுகால கனவு திட்டமான சேது கால்வாய் திட்டத்தை முடக்கிப்போட வேண்டும் என்றும் கருதுவது தமிழக நலனுக்கு எதிரானதாகவே அமையும்.
சேது கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தங்களின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் இதை எப்படியாவது முடக்கி விட வேண்டும் என்று இலங்கை அரசு துடித்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தமிழக அரசின் நிலைப்பாடு இலங்கைக்கு சாதகமாகவும், தமிழகத்திற்கு எதிராகவுமே அமையும் என்பதை முதல்வர் உணர வேண்டும். கற்பனை கதைகளுக்கு செவி கொடுக்காமல், சேது கால்வாய் திட்டம் தொடர்பான தனது நிலைப்பாட்டை தமிழக அரசு மாற்றி கொள்ள வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தமிழக அரசு திரும்ப பெற்று கொண்டு, தமிழகத்தின் வளர்ச்சிக்கான சேது கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications