குப்பைகளை அகற்றாவிடில் பெங்களூர் மாநகராட்சியை கலைக்க உத்தரவிடுவோம்: கர்நாடகா ஹைகோர்ட்
பெங்களூர்: பெங்களூர் தெருக்களில் மலை போல் குவிந்திருக்கும் குப்பைகளை அகற்றாவிட்டால் பெங்களூர் மாநகராட்சியை கலைக்க உத்தரவிடுவோம் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரின் தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாமல் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பெங்களூர் மாநகராட்சியைக் கலைக்கக் கோரி வழக்கறிஞர் ஜி.ஆர்.மோகன் என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
பெங்களூரில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் கடமையில் இருந்து பெங்களூர் மாநகராட்சி தவறியுள்ளது. குப்பைகள் குவிந்துள்ளதால் பொதுசுகாதாரம் சீர்கெட்டுள்ளது. குப்பைகள் அகற்றப்படாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குப்பைகளை அகற்ற தவறினால், மாநகராட்சி அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடுவதாக கர்நாடக உயர்நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கையையும் மாநகராட்சி பொருள்படுத்தவில்லை என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான பெஞ்ச் முன்பு நேற்று நடந்தது. அப்போது மாநகராட்சி ஆணையர் ரஜ்னீஷ் கோயல் கூறுகையில்,
நகரில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 40 சதவீத குப்பைகள் ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளது. குப்பைகளை அகற்ற கோரப்பட்ட புதிய ஒப்பந்தப்புள்ளி மீது இறுதி முடிவு எடுத்து அது வரும் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றார்.
இதையடுத்து நீதிபதி சென் பெங்களூர் மாநகராட்சியை கண்டித்தார். மேலும் குப்பைகளை அகற்றவில்லை என்றால் மாநகராட்சியைக் கலைக்க நீதிமன்றம் தயங்காது என்றார். இது தவிர குப்பைகளை அகற்ற மாநகராட்சி இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை வரும் 5ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.