நாடாளுமன்றத் தேர்தல்: கூட்டணி, வேட்பாளர்கள் தேர்வு குறித்து காங்கிரஸ் குழு தமிழகத்தில் ஆய்வு!
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி, காங்கிரஸ் வேட்பாளர்கள், காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து கட்சியினரிடம் கருத்துக் கேட்ட ராகுல் காந்தி அனுப்பி வைத்துள்ள காங்கிரஸ் குழுவினர் தமிழகம் வந்துள்ளனர்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தலைமையில் அந்தக் கட்சி சந்திக்கவுள்ளது. இவருக்கு உதவியாக பல துணைக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் மூத்த தலைவர்களான அகமத் படேல், ஜனார்த்தன் துவிவேதி, திக்விஜய் சிங், மதுசூதன் மிஸ்த்ரி, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்டனி தலைமையில் இன்னொரு குழுவும், தேர்தல் அறிக்கை தயாரிக்க, தகவல் தொடர்பு மற்றும் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள திக்விஜய் சிங் தலைமையில் இன்னொரு துணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்வது தொடர்பாக கட்சியினரின் கருத்துக்களை அறிவதற்காக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பல தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், அரக்கோணம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 10 தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளராக ஆந்திர மகளிர் காங்கிரஸ் நிர்வாகி கங்கா பவானி நியமிக்கப்ட்டுள்ளார்.
கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், திருச்சி, கருர், திண்டுக்கல், சிதம்பரம், பொள்ளாச்சி ஆகிய 10 தொகுதிகளுக்கும் ஜி.பி.வி. சுப்பன் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, ஆரணி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி ஆகிய 10 தொகுதிகளுக்கு கேரளாவை சேர்ந்த ஜார்ஜ் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளுக்கு சி.ஆர். பத்மராஜு தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் கட்சியினரின் கருத்துக்களை அறிவதற்காக தமிழகம் வந்துள்ளனர்.
காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பி-எம்எல்ஏக்கள், மாவட்டத் தலைவர்கள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆகியோரை தொகுதி வாரியாக சந்தித்து வேட்பாளர்கள், கூட்டணி குறித்து கருத்துக்களைக் கேட்டு வருகின்றனர்.
இவ்வாறு திரப்பட்டும் தகவல்களை அறிக்கையாக ராகுல் காந்தியிடம் இந்தக் குழு ஒப்படைக்கவுள்ளது. அதன் அடிப்படையில் ராகுல் காந்தி கூட்டணி குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும், காங்கிரசுக்கான தொகுதிகள் குறித்தும் முடிவு செய்வாராம்.
மக்களின் கருத்தை அறியாதவரை அல்லது உணராதவரை இதெல்லாம் எவ்வளவு தூரம் காங்கிரசுக்கு உதவும் என்பது தெரியவில்லை.