பேஸ்புக் கருத்துக்கு கைது: முறைப்படுத்த மத்திய அரசு முடிவு

சிவசேனா தலைவர் பால்தாக்கரே காலமானபோது மும்பையில் பந்த் நடத்தப்பட்டதை எதிர்த்து பேஸ்புக் இணையதளத்தில் கருத்து வெளியிட்டதற்காக 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இது பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்று எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66ஏ பிரிவு தவறாக பயன்படுத்துவதை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி கேட்டார்.
அந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கபில் சிபல், "ஒரு சில மாநிலங்களில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66ஏ பிரிவு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.அங்கு போலீசாரின் செயல்பாடு சரியல்ல என்பதே மத்திய அரசின் கருத்து. நாடுமுழுவதும் ஒட்டு மொத்தமாக அந்த சட்டப்பிரிவு தவறாக பயன்படுத்தப்படுவதாக தெரியவில்லை.
குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமைக்கு இந்த சட்டப்பிரிவு எதிரானது அல்ல. இந்த சட்டப்பிரிவை சரியாக பயன்படுத்துவது தொடர்பாக மாநில போலீசாருக்கு தெரிவிக்க சுற்றறிக்கை ஒன்றை மத்திய அரசு விரைவில் அனுப்பும்" என்றார்.
இந்த புதிய சுற்றறிக்கைப் படி இனி இப்பிரிவின் கீழ் யார் மீதாவது போலீஸார் வழக்கு பதிவு செய்ய வேண்டுமெனில் டெபுடி கமிஷனர் அந்தஸ்திலுள்ள அதிகாரியின் ஒப்புதல் வாங்க வேண்டுமென தெரிகிறது.












Click it and Unblock the Notifications