இந்நேரம் அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..?

Subscribe to Oneindia Tamil

Abdul Kalam
டெல்லி: இதயமெல்லாம் வலிக்கிறது நினைத்துப் பார்க்கவே.. நம்முடைய தங்கைக்கு இப்படி நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்.. அப்படி ஒரு கொடூரம்தான் டெல்லியில் மருத்துவ மாணவிக்கு நடந்த பாலியல் பலாத்காரம். இந்த கொடுமையைக் கண்டு கொதித்துப் போய் டெல்லியை உலுக்கி வருகிறார்கள் இளைஞர்கள். அந்தக் கொதிப்பை சந்திக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது டெல்லி நிர்வாகமும், மத்திய அரசும்.

இந்த நேரத்தில் அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற ஏக்கம் கலந்த ஒரு சிந்தனை நமக்குள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஏன் இப்படி ஒரு சிந்தனை இந்த நேரத்தில்...?

இந்தியாவின் குடியரசுத் தலைவராக மட்டும் அப்துல் கலாம் இருந்ததில்லை. ஒரு தந்தையாக, ஒரு தோழனாக, ஒரு சகோதரனாகத்தான் அத்தனை பேராலும் பார்க்கப்பட்டார் கலாம். காரணம் அவரது 'அப்ரோச்', அணுகுமுறை.

பள்ளிப் பிள்ளைகள் மத்தியில் ஒரு ஆசானாக, ஒரு நண்பனாக, ஒரு தந்தையாக மாறி நிற்பார். இளைஞர்களைக் கண்டு விட்டால் அவரே ஒரு இளைஞனாக மாறி விடுவார். தோளோடு தோள் கோர்த்து அவர்களிடம் அன்னியோன்யமாக பேசுவார். அவரது இதமான பேச்சும், அதில் தவறாமல் கலந்திருக்கும் அருமையான அறிவுரைகளும் இளைய தலைமுறைக்கு உற்சாக டானிக்காக அமைந்திருந்தது.

யாரிடம் எப்படிப் பேச வேண்டும், என்ன பேச வேண்டும், எப்படிச் சொன்னால் கேட்பார்கள், எதைச் சொன்னால் ஏற்பார்கள் என்ற வித்தையைக் கற்றவர் கலாம். அவரது பேச்சைத் தட்டாதவர்கள் தான் இந்த நாட்டில் ஏராளம்.

இதனால்தான் இப்போது கலாம் ஜனாதிபதியாக இருந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் நம்மை வாட்டி வதைக்கிறது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தனது மாளிகையை விட்டு இதுவரை வெளிவரவில்லை. டெல்லி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக ஒரு சின்ன வருத்தத்தையோ, அதிர்ச்சியையோ, கவலையையோ அவர் வெளிப்படுத்தவில்லை.

இது ஆச்சரியத்தையும், கவலையையும் நமக்கு ஏற்படுத்துகிறது. ஒரு குடியரசுத் தலைவராக இருப்பவர், அவரது நாட்டில் நடக்கும், நடந்த ஒரு மக்கள் தொடர்புடைய சம்பவம் குறித்து கவலை தெரிவிக்கக் கூடாதா, சட்டம் அப்படியா அவரைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது... இந்தக் கேள்விதான் சாதாரண ஜனங்களின் மனதில் எழுகிறது.

இதுவே கலாமாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை சற்றே யோசித்துப் பாருங்கள்...!

டெல்லி சம்பவம் நடந்த உடனேயே அவர் அதிர்ச்சியும், கவலையும் தெரிவித்து நிச்சயம் கருத்து தெரிவித்திருப்பார். பாதிக்கப்பட்ட பெண்ணை உடனே போய் மருத்துவமனையில் சென்று சந்தித்திருப்பார். டாக்டர்களிடம் கலந்து பேசியிருப்பார்.

அந்தப் பெண்ணை சந்திக்க எந்தவித பாதுகாப்பும் தேவையில்லை என்று உதறி விட்டு தனி மனிதராக கூட வந்து போயிருப்பார். காரணம், அவர் அப்துல் கலாம்.

இப்போது டெல்லி தெருக்களை உலுக்கி எடுத்து வரும் இளைஞர்களையும் அவர் நடந்தே வந்து கூட சந்தித்துப் பேசியிருப்பார். அவர்களுக்கு மத்தியில் சாதாரண மனிதராக அமர்ந்து பேசியிருப்பார். அவர்களுக்கு ஆறுதல் கூறியிருப்பார். போராட்டத்தைக் கைவிட அன்புடன் கோரிக்கை வைத்திருப்பார். இதுபோன்ற சம்பவங்களை எதிர்த்து அமைதி வழியில் போராட அறிவுரை சொல்லியிருப்பார். உங்களுக்கு ஆதரவாக நானும் இருக்கிறேன் என்றும் கூறியிருப்பார்.

ஆனால் இப்படி எந்த ஒரு நடவடிக்கையையும் நாம் இப்போதைய குடியரசுத் தலைவரிடமிருந்து எதிர்பார்க்க முடியவில்லை.

இதனால்தான் தேவையில்லாமல் கலாமின் நினைவு வந்து நம்மை வாட்டுகிறது. இக்கால இளைஞர்களை கலாம் மிஸ் செய்யவில்லை... மாறாக அவர்கள்தான் கலாமை மிஸ் செய்கின்றனர்!.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+