பட்டம்: என்ஜினியர் மாஞ்சா நூல் அறுத்து பலி: 17 வயது சிறுவன் கைது
சென்னை: சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து சாப்ட்வேர் என்ஜினியர் பலியான வழக்கில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.
சென்னை மந்தைவெளி வன்னியம்பதி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்தவர் ஜெயகாந்த்(34). சோழிங்கநல்லூரில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை 4.25 மணிக்கு அவர் தனது பைக்கில் மனைவி மாலா(29) மற்றும் ஒன்றரை வயது மகள் சஞ்சனாவுடன் புளியந்தோப்பில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார். மாமியார் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்க பிரியாணி, இனிப்பு வகைகளை எடுத்துச் சென்றார்.
பல்லவன் சாலை சென்ட்ரல் பாலத்தில் அவர் சென்று கொண்டிருக்கையில் மாஞ்சா நூல் வந்து அவரது கழுத்தை இறுக்கியது. இதில் அவர் கழுத்து அறுபட்டு கீழே விழுந்தார். மாலாவும் குழந்தையுடன் விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயகாந்தை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனையில் சேர்த்த 10 நிமிடத்திலேயே இறந்தார்.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பட்டம் விட்டவர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பல்லவன் சாலை சத்தியவாணி முத்து நகரைச் சேர்ந்த விக்னேஷ்(17) என்னும் சிறுவனை கைது செய்து கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.