இந்தியாவில் 4.4 லட்சம் சாலை விபத்துக்கள்…. 4 நிமிடத்திற்கு ஒருவர் காயம்!
மும்பை: இந்தியாவில் 2011ம் ஆண்டுமட்டும் 4.4 லட்சம் சாலை விபத்துக்கள் ஏற்பட்டதாக கூறி அதிரவைக்கிறது ஒரு புள்ளிவிபரம். மராட்டியமாநிலத்தில் மட்டும் கடந்த ஆண்டு 68000 விபத்துகள் ஏற்பட்டுள்ளதாம். அதுவும் மது அருந்திவிட்டு போதையில் வாகனம் ஓட்டியதால்தான் இந்த விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது அந்த புள்ளிவிபரம்.
சாலை ஓரங்களில் மதுபானக்கடைகள். அதனருகில் வாகனத்தை நிறுத்திவிட்டு மது அருந்தும் வாகன .ஒட்டிகள் போதையுடன் வாகனம் ஓட்டுகின்றனர். இதனால் விபத்துக்கு ஆளாகி அவர்கள் உயிரிழப்பதோடு அப்பாவி பாதசாரிகளின் உயிரினையும் சேர்த்து பறிக்கின்றனர்.
இந்தியாவில் சாலைவிபத்துக்கள் நடப்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒரு விபத்து நடக்கிறது. நான்கு நிமிடத்திற்கு ஒருவர் சாலை விபத்தில் சிக்கி காயமடைகின்றனராம். ஜனவரி 1 முதல் 7 வரை சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுவதை ஒட்டி இந்த புள்ளிவிபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இளம் வயதினர் மரணம்
சாலை விபத்தில் அதிகம் பாதிப்பிற்குள்ளாவது 18 முதல் 54 வயது வரை உடையவர்கள்தான் என்கின்றனர் போக்குவரத்துத்துறை அதிகாரிகள். அதுவும் மது போதையில்தான் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றனவாம். 2012ம் ஆண்டில் 59,510 விபத்துகள் பதிவாகியுள்ளனவாம். அதுவும் பெரும்பாலும் மதுபோதையால்தான் இந்த விபத்துக்கள் ஏற்பட்டுள்ளனவாம்.
மகாராஷ்டிராவில் 68000 விபத்துகள்
இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் கடந்த 2011ம் ஆண்டு 68,438 சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளனவாம். இதுவே 2006ம் ஆண்டில் 75,779 ஆக இருந்தது. இப்போது படிப்படியாக குறைந்துள்ளது என்கின்றனர் போக்குவரத்துறை அதிகாரிகள். மும்பையில் வாகனப்போக்குவரத்து அதிகரித்துள்ளது பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணம் என்கின்றனர் அதிகாரிகள். பெருகிவரும் வாகனப்போக்குவரத்துக்கு ஏற்ப சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பதும் அதிகரிகளின் கூற்று.
சாலையோர மதுபானக்கடைகள்
இந்த அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரம் வெளியிடப்பட்டதன் எதிரொலியாக இந்தியா முழுவதும் சாலையோரங்களில் செயல்பட்டுவரும் மதுபானக்கடைகளை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த மதுபானக்கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. அரசின் அதிரடி நடவடிக்கைக்குப் பின்னராவது சாலை விபத்துக்களும், உயிரிழப்புக்களும் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.