மாத ஊதியம் வாங்கும் 'பாவப்பட்ட ஜென்மமா' நீங்கள்.. பட்ஜெட் வரப் போகுது.. பாக்கெட் கிழிய போகுது!
டெல்லி: மாத வருவாய் ரூ. 80,000க்கு மேல் உள்ளவர்களுக்கு வருமான வரி 5 சதவீதம் வரை உயரும் என்று தெரிகிறது. இதனால் ஆண்டுக்கு 10 லட்சத்துக்கு அதிகமான ஊதியம் பெருவோர் அதிக வரி செலுத்த வேண்டி வரும். இந்த அளவுக்கு ஊதியம் பெருவோரில் பெரும்பாலானோர் கார்பரேட் மற்றும் சாப்ட்வேர் துறையில் தான் உள்ளனர். இதனால் இவர்களுக்கு வரி கடுமையாகலாம்.
அதே நேரத்தில் மாத வருவாய் ரூ. 20,000க்குள் உள்ளவர்களுக்கு மட்டும் வரி விலக்கு கொஞ்சம் உயர உள்ளது.
பட்ஜெட்டும் பாக்கெடும்...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இதில் 2012-13ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வருமான வரி விதிப்பில் சிறிய மாற்றம் செய்ய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அமெரிக்காவில் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்க சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதே போல இந்தியாவிலும் பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ரங்கராஜன் சொல்லிட்டார்...
இது குறித்து பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜன் சமீபத்தில் கூறுகையில், இந்தியாவில் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதித்தால் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் நடுத்தர வருவாய் கொண்ட மக்களை குறிப்பாக அலுவலகப் பணியாளர்களை திருப்திப்படுத்தவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன்படி குறைந்த சம்பளம் வாங்கும் வாங்கும் தனி நபர் வருமான வரி கொஞ்சம் குறைக்கப்படலாம் என்று தெரிகிறது.
ரூ. 2 லட்சம் டூ ரூ. 2.10 லட்சம்:
தற்போது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம் வரை உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை. ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சம்பளம் பெறுவோருக்கு 10 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதமும் , ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ. 2.10 லட்சம் வரை என்று கொஞ்சம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ. 10 லட்சம் வருட ஊதியமா?.. போச்சு..
அதே நேரத்தில் ஆண்டு வருவாய் ரூ. 10 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கான வரி 30 சதவீதத்தில் இருந்து 35 சதவீதம் வரை உயரக்கூடும் என்றும் தெரிகிறது.
இதனால் மாத வருவாய் ரூ. 80,000 உள்ளவர்களுக்கு வரி அதிகமாகப் போகிறது. அதே நேரத்தில் மாத வருவாய் ரூ. 20,000க்குள் உள்ளவர்களுக்கு மட்டும் வரி குறையவுள்ளது.
இவர்கள் எல்லாம் வரி கட்டி விட்டார்களா?:
வீடுகளை வாடகைக்கு விட்டு பல லட்சம் சம்பாதிப்போர், பெரும் விவசாயிகள், லட்சக்கணக்கில் சம்பாதித்தும் வரி ஏய்ப்பு செய்யும் கடைக்காரர்கள், பில்களே இல்லாமல் பிஸினஸ் செய்து தினந்தோறும் பல லட்சம் சம்பாதித்தும் வரி கட்டாதவர்கள் எல்லாம் தப்பிவிடும் நிலையில், மாதாமாதம் கஷ்டப்பட்டு உழைத்து, முறையாக சம்பாளம் வாங்கும் மாத ஊதியதாரக்கள் தான் வருமான வரித்துறையினருக்கு பொன் முட்டை வாத்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களைத் தான் 'பணக்காரர்கள்' என்ற பட்டியலின் கீழ் கொண்டு வந்து மேலும் நசுக்கத் திட்டமிட்டுள்ளனர். முதலில் எல்லோருமே வரி கட்ட வேண்டும் என்ற நிலையை உருவாக்கினால் தான் மாத ஊதியம் வாங்குவோரை பிழிந்து எடுப்பதை தவிர்க்க முடியும்.
உதாரணத்துக்கு...
உதாரணத்துக்கு ஆட்டோ, டாக்ஸி ஓட்டுபவரை எடுத்துக் கொள்ளுங்கள்.. இவர் ஒரு நாளைக்கு 500 முதல் 3,000 ரூபாய் வரை சம்பாதித்தாலும் இவர் வரி கட்டுகிறாரா?. அதைக் கேட்கிறார்களா?. நீங்கள் 'தம்' அடிக்கப் போகும் பெட்டிக் கடைக்காரர் ஒரு நாளைக்கு ரூ. 2,000 சம்பாதித்தாலும் அவர் வருமான வரியை கட்டிவிட்டா பிஸினஸ் செய்கிறார்?
ஆனால், உங்கள் அப்பா ஒரு ஜவுளி ஆலையில் மாதம் ரூ. 21,000 சம்பாதித்தால் போச்சு.. அதாவது ஒரு நாளைக்கு ரூ. 700 சம்பாத்தியம்.. அவர் வரியைக் கட்டிவிட்டுத்தான் சம்பளத்தை வாங்கி வருகிறார்.
முதலில் பரம ஏழைகள் தவிர அனைவரையும் வரி கட்ட வைத்தால் தான் இந்த நாடு உருப்படும்.