டீசல் விலை ரூ.3 உயர்கிறது: இனி மாதந்தோறும் பெட்ரோல்-டீசல்-கேஸ் விலை கூடும்!
டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அனைத்து மானியங்களையும் படிப்படியாகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து படிப்படியாக உயரவுள்ளது. முதல் கட்டமாக டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 வரை உயரும் என்று தெரிகிறது.
இது தொடர்பாக விஜய் கேல்கர் கமிட்டி பரிந்துரைகளை அமலாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் 2013-14க்கான பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்புகளை நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் வழியில் டீசல்:
விஜய் கேல்கர் தனது பரிந்துரைகளில் கூறியுள்ள முக்கியமான விஷயம், டீசல் மீதான மானியத்தை அடியோடு நீக்குவதே. பெட்ரோல் மீதான மானியங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு இப்போது சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்க பெட்ரோல் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றப்பட்டு வருகிறது.
இதே போல டீசலையும் விலைக் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கவும், சர்வதேச சந்தை விலைக்கே அதையும் விற்க வேண்டும் என்றும், இதன்மூலமே மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்க முடியும் என்றும் கூறியுள்ளார் கேல்கர்.
மாந்தோறும் ரூ. 1 உயர்த்த திட்டம்:
அதே நேரத்தில் ஒரேயடியாக விலையை உயர்த்தாமல் மாதந்தோறும் லிட்டருக்கு ரூ. 1 என்ற விகிதத்தில் டீசல் விலையை உயர்த்தலாம் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார். இந்த விலை உயர்வு 1 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது என்றும், அதைப் படிப்படியாக உயர்த்தி, சர்வதேச விலை அளவுக்குக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதன்மூலம் மக்களுக்கு அதிக வலி தெரியாது என்பது அவரது கருத்து.
கேஸ் மற்றும் மண்ணெண்ணெய் விலையும்..
அதே போல மிக அதிகமான மானியத்துடன் மக்களுக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்கப்படும் மண்ணெண்ணெய் விலையையும் படிப்படியாக உயர்த்த வேண்டும் என்றும், மானியம் அடங்கிய கேஸ் சிலிண்டரின் விலையிலும் மானியத்தை படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்றும் கேல்கர் கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
இந்தப் பரிந்துரைகளை 2014-15ம் நிதியாண்டில் அமலாக்க வேண்டும் என்றும் விஜய் கேல்கர் கூறியுள்ளார். இதனால் இது தொடர்பான முடிவை 2013-14 நிதியாண்டில், குறிப்பாக வரும் பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சகம் எடுத்தாக வேண்டும்.
ஆனால், தேர்தல் வருதே..
ஆனால், அடுத்த ஆண்டு மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள மத்திய அரசு இந்த வேலையைச் செய்யுமா என்பது தெரியவில்லை. இருப்பினும் டீசல் விலை உயர்வை ரொம்ப நாளைக்கு தள்ளிப் போட முடியாது என்பதாதும், இதைத் தள்ளிப் போட்டால் அரசின் வருவாய் எல்லாம் டீசல் குடித்தது போக, நலத் திட்ட உதவிகளுக்குக் கூட நிதியில்லாமல் அல்லாடும் நிலை உருவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அரசுக்கு ஏற்படும் இழப்புகள் (ஓட்டு என்று படிக்கவும்) அதிகமாக இருக்கும்.
மொதல்ல டீசல்...
இதனால் முதல்கட்டமாக டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 வரை உடனடியாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு எந்த நேரமும் வெளியாகலாம்.
தற்போது எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு லிட்டர் டீசல் விற்பனையால் ரூ. 10க்கு மேல் இழப்பு ஏற்படுகிறது. பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணெய் விற்பனையில் நாள் ஒன்றுக்கு ரூ.411 கோடி இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.
டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்யும்..
இதனால் டீசல் விலையை மாதந்தோறும் ரூ. 1 உயர்த்தி, சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்த அளவுக்கு கொண்டு வந்துவிட்டு, பின்னர் இதன் விலையை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளும் உரிமையை கொடுக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
பங்குச் சந்தையில் எண்ணெய் நிறுவன பங்குகள் வெறியாட்டம்...
டீசல் விலையை உயர்த்தப் போறாங்களாம், பெட்ரோல், கேஸ், மண்ணெண்ணெய் மீதான எல்லா மானியமும் ரத்தாகப் போகுதாம் என்ற நியூஸ் பரவியதுமே, மத்திய எண்ணெய் நிறுவனங்கள் பெரும் லாபத்தை ஈட்டப் போகின்றன என்ற யூகத்தில் இன்று காலை முதலே இவற்றின் பங்குகள் விலை மளமளவென உயர ஆரம்பித்துவிட்டது.