பலாத்கார சம்பவம்- தண்டனையிலிருந்து தப்ப குற்றவாளிகள் அப்ரூவராக விருப்பம்! மாணவி குடும்பம் எதிர்ப்பு!
டெல்லி: ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகள் அப்ரூவராக மாணவியின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ மாணவியை கொடூரமாக பலாத்காரம் செய்து அந்த மாணவியின் மரணத்துக்குக் காரணமான 6 குற்றவாளிகளில் வினய் சர்மா மற்றும் பவன் குப்தா 2 பேர் அப்ரூவராக மாறப் போவதாகக் கூறியுள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த டெல்லி போலீசார், பலாத்கார வழக்கில் சிக்கிய அனைவருக்கும் மரண தண்டனை கிடைத்துவிடும் என்பதால் அதிலிருந்து தப்பிக்கவே அப்ரூவர் நாடகமாடுகின்றனர் என்று கூறியுள்ளனர். இதனால் எந்த ஒரு குற்றவாளியையும் அரசுத் தரப்பு சாட்சியாக மாற அனுமதிக்கப் போவதில்லை என்றும் டெல்லி போலீசார் கூறியுள்ளனர். அப்படி அப்ரூவர் ஆக அவர்கள் விருப்பம் தெரிவித்தால் கடுமையாக ஆட்சேபம் தெரிவிப்போம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினரும் தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்கவே, 2 குற்றவாளிகள் அரசு தரப்பு சாட்சிகளாக மாற விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், அவர்களது மனுவை நீதிமன்றம் நிச்சயமாக நிராகரிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மாணவியின்ல் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதே கருத்தை தெரிவித்துள்ள சட்டத்துறை வல்லுநர்கள், கொடூர குற்றங்களை செய்துவிட்டு தாம் அப்ரூவராகிறேன் என்றெல்லாம் சொல்லி தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்கின்றனர். மேலும் ஒரு வழக்கில் அப்ரூவர் அல்லது அரசுத் தரப்பு சாட்சி என்பது போதுமான சாட்சியம் இல்லை என்றால்தான் தேவை. ஆனால் இந்த வழக்கைப் பொறுத்தவரையில் அப்படி ஒரு நிலைமை இல்லை. இதனால் இந்த அப்ரூவராகக் கோரும் மனுவை நீதிமன்றமே நிராகரித்துவிடும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டு மரணமடைந்த பெண்ணின் வாக்குமூலம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இதனால் சாட்சியம் எதுவும் தேவை இல்லை. அனேகமாக இருவரையும் சாட்சியமாக மாற நீதிமன்றம் அனுமதிக்கிறார் என்கிறார் கிரிமினல் வழக்கறிஞர் மஜித் மேனன்.
5 குற்றவாளிகளும் கோர்ட்டில் ஆஜர்
இதற்கிடையே, டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.