சென்னையில் தொடரும் மாணவர்கள் மோதல்- மூவர் மண்டை உடைந்தது! ஒருவருக்கு அரிவாள் வெட்டு!
சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர்களிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுவது தொடர் கதையாகிவருகிறது. 2 மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த மோதலின் போது மரங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கத்திகள், கம்பிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 10 மாணவர்களும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று காலை மாநிலக் கல்லூரி வளாகத்தில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. பெரம்பூரில் இருந்து அண்ணா சதுக்கம் வரும் 29ஏ மாநகர பஸ் மாணவர்களுக்கும் திருவான்மிளயூரில் இருந்து திருவொற்றியூர் டோல்கோட்டுக்கு செல்லும் 6டி மாநகர பஸ் மாணவர்களுக்கும் இடையில்தான் மோதல் வெடித்தது.
இருதரப்பு மாணவர்கள் உருட்டுக் கட்டை கத்தியால் மோதிக் கொண்டனர். இதில் 6டி பேருந்தில் வந்த மாணவர்கள் அசோக், உதயா, சதீஷ்குமார் ஆகியோருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனைத் தொடர்ந்து மற்ற மாணவர்கள் தப்பியோடினர்.
இம்மோதலைத் தொடர்ந்து போலீசார் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டனர். மேலும் மாணவர்களிடையேயான மோதல் பற்றிய விசாரணையின் போது 50க்கும் மேற்பட்டோர் மோதலில் ஈடுபட்டது தெரியவந்தது.
மாணவர்களிடையேயான மோதலால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. இம்மோதல் களேபரம் அடங்குவதற்குள் திருவல்லிக்கேணியில் மற்றொரு தரப்பு மாணவர்களிடையே மோதல் நிகழ்ந்தது. இதில் ஒரு மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
இந்த தொடர் மோதல் சம்பவங்கள் காரணமாக சென்னை மெரீனா கடற்கரை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் பகுதிகளில் பதட்டம், பரபரப்பு ஏற்பட்டது.