உசிலம்பட்டி அருகே வரிப்பணம் ரூ.50,000த்தை ஆட்டையப் போட்ட ஊராட்சி எழுத்தர் சஸ்பெண்ட்
மதுரை: உசிலம்பட்டி அருகே இருக்கும் துள்ளுக்குட்டி நாயக்கனூர் ஊராட்சி எழுத்தர் வரிப்பணம் ரூ.50,000த்தை கையாடியதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்ய மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கும் சேடப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்டது துள்ளுக்குட்டி நாயக்கனூர் ஊராட்சி. 12 வார்டுகள் உள்ள இந்த ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கிராம மக்கள் மதுரை மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தனர். இதனையடு்த்து துள்ளுக்குட்டி நாயக்கனூரில் ஆய்வு நடத்துமாறு கலெக்டர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர்(தணிக்கை) ராஜசேகர் ஆய்வு செய்தார். ஆய்வில் ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகளும், கையாடல்களும் நடந்திருப்பது தெரிய வந்தது.
இதில் அரசு நிதி சுமார் ரூ50 லட்சம் செலவழித்தற்கான எந்த கணக்கும் இல்லை என்பது தெரிய வந்தது. மேலும் வீட்டுவரி, தொழில்வரி, குடிநீர்வரி உள்ளிட்ட பல்வேறு வரிப் பணம் சுமார் ரூ. 50,000 ரொக்கத்தை ஊராட்சி எழுத்தர் கல்யாணசுந்தரம் கையாடல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
வரிப்பணத்தை கையாடல் செய்த கல்யாணசுந்தரத்தை சஸ்பெண்ட் செய்ய கலெக்டர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டார். மேலும் ஊராட்சி தலைவர் தொந்தியிடம் இருந்து காசோலையில் கையெழுத்திடும் உரிமம் பறிக்கப்பட்டது.