ஆசிட் தாக்குதலில் பார்வையிழந்த வினோதினிக்கு புதுவை அரசு ரூ. 2 லட்சம் நிதியுதவி
புதுவை யூனியன் பிரதேசம், காரைக்காலை சேர்ந்தவர் வினோதினி. சென்னை சைதாப்பேட்டையில் தங்கி இருந்து சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரை ஒருதலையாக காதலித்த கட்டிடத் தொழிலாளி சுரேஷ் தனது காதலை ஏற்க மறுத்த வினோதினி மீது ஆசிட் வீசினார். இதில் வினோதினியின் முகம் மற்றும் உடலில் பல பகுதிகள் கருகிப்போனது. முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் வினோதினி.
நேரடியாக ஆசிட் வீசப்பட்டதால் வினோதினியின் இரு கண்களும் எரிந்து பார்வை பறிபோய் விட்டது. தொடையில் உள்ள சதையை வெட்டி எடுத்து முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளனர். கண்ணையும் சதையால் தைத்து மூடி உள்ளனர். வருங்காலத்தில் கண்ணின் அடையாளமாக செயற்கை கண்கள் பெருத்தலாம் என்று கூறப்படுகிறது. வினோதினியின் தந்தை ஜெயபாலன் செக்யூரிட்டியாக வேலை பார்க்கிறார். உயர் சிகிச்சை அளிக்கப்படுவதால் மகளின் மருத்துவ செலவுகளுக்கு பணம் இல்லாமல் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். கண்கள் இழந்து, எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் வாழப்போராடிக் கொண்டிருக்கும் இந்த இளம்பெண்ணுக்கு உதவி கரம் நீட்டும்படி பொதுமக்களுக்கு வினோதினியின் உறவினர்களும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், புதுவை முதல்வர் ரங்கசாமி, வினோதினியின் சிகிச்சைச் செலவுக்காக முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சித் தலைவர் அசோக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், காரைக்காலில் கடந்த நவம்பர் 14-ந் தேதி ஆசிட் தாக்குதலுக்கு ஆளான வினோதினி மற்றும் அவரது தந்தை ஜெயபால் ஆகியோரது மருத்துவ செலவிற்காக முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் உதவித் தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் சந்திரகாசு மூலம் காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதற்கான காசோலை ஒப்படைக்கப்பட்டது.
தற்சமயம் வினோதினியும், அவரது பெற்றோரும் சிகிச்சைக்காக சென்னையில் தங்கி இருப்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கண்ட நிவாரணத் தொகைக்கான காசோலையை அவர்களிடம் நேரில் வழங்க சிறப்பு அலுவலர் பணியமர்த்தப்பட்டு சென்னையில் வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.